Tuesday, May 14, 2024
Home » 7 திட்டங்களில் ரூ.7.5 லட்சம் கோடி முறைகேடு ஊழல் பற்றி பேச மோடிக்கு அருகதை இல்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு குற்றச்சாட்டு

7 திட்டங்களில் ரூ.7.5 லட்சம் கோடி முறைகேடு ஊழல் பற்றி பேச மோடிக்கு அருகதை இல்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு குற்றச்சாட்டு

by Ranjith

திருவாரூர்: சிஏஜி அறிக்கையின்படி ஒன்றிய அரசு துறைகளில் ரூ.7.5 லட்சம் கோடி ஊழல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. எனவே பிரதமர் மோடிக்கு ஊழலைப்பற்றி பேசுவதற்கு அருகதை, யோக்கியதை உண்டா என திருவாரூரில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். நாகப்பட்டினம் எம்.பி செல்வராஜ் இல்ல திருமண விழா, திருவாரூர் அருகே பவித்திரமாணிக்கத்தில் நேற்று நடந்தது. முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தி பேசியதாவது: கடந்த 9 வருடமாக பாஜ ஆட்சி மோடி தலைமையில் நடந்து கொண்டிருக்கிறது.

இந்த 9 வருடமாக நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் இதை செய்திருக்கிறோம், இந்தத் திட்டங்களை அறிவித்திருக்கிறோம், நிறைவேற்றி இருக்கிறோம், சாதனைகளை படைத்திருக்கிறோம், மக்களுக்கு எல்லாம் இப்படி நன்மைகளை செய்திருக்கிறோம் என்று ஏதாவது அவர்களால் சொல்ல முடிகிறதா? எதுவும் சொல்ல முடியவில்லை. மதத்தை வைத்து ஆங்காங்கே மதக்கலவரங்களை ஏற்படுத்தி, நாட்டை இரண்டாக்கும் சூழ்நிலையில் ஒரு கொடிய ஆட்சி இன்றைக்கு இந்தியாவில் நடந்து கொண்டிருக்கிறது. இந்த ஆட்சியை ஒழித்தாக வேண்டும் என்பதற்காகத்தான் இந்தியா என்ற தலைமையில் ஒரு கூட்டணியை நாம் அமைத்திருக்கிறோம். இதை பிரதமர் மோடியால் தாங்க முடியவில்லை.

இந்தியா என்ற கூட்டணி உருவாகுவதற்கு தமிழ்நாட்டில் இருக்கும் இந்த கூட்டணி காரணமாக இருக்கிறது என்ற ஒரு ஆத்திரம் இன்றைக்கு பிரதமராக இருக்கும் மோடிக்கு வந்துவிட்டது. அதனால்தான் எங்கு சென்றாலும் நாம் அமைத்திருக்கும் கூட்டணியை பற்றி விமர்சனம் செய்து பேசிக் கொண்டிருக்கிறார், கொச்சைப்படுத்தி பேசுகிறார். தமிழ்நாட்டில் ஊழல் வந்துவிட்டதாம். ஒன்பது வருடமாக சொல்லி கொண்டிருக்கிறார். எனவே அந்த ஊழலை ஒழித்தே தீருவேன். இந்தியாவில் இருக்கும் ஊழலைத் ஒழித்தே தீருவேன் என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார். நான் பிரதமர் மோடி அவர்களை பார்த்து அடக்கத்தோடு கேட்க விரும்புவது, ஊழலை பற்றி பேசுவதற்கு யோக்கியதை பிரதமராக இருக்கும் மோடிக்கு உண்டா? உங்களுடைய வண்டவாளம் எல்லாம் இப்போது சி.ஏ.ஜி. ஆதாரங்களோடு எடுத்து வெளியிடுகிறார்களே, எல்லாவற்றையும் குறித்துவிட்டுத்தான் வந்திருக்கிறேன்.

ஊழலை பற்றி பேசுவதற்கு பாஜவுக்கு என்ன தகுதி இருக்கிறது? சி.ஏ.ஜி. என்ன சொல்கிறது என்றால், ஒன்றியத்தில் நடைபெறும் பாஜ ஆட்சி, ஊழல் ஆட்சி. முறைகேடுகள் அதிகம் கொண்ட ஆட்சி. லஞ்ச லாவண்யம் பெருத்து போன ஆட்சி என்று சொல்கிறது. நாங்கள் சொல்லவில்லை. எதிர்க்கட்சி சொல்லவில்லை. நாங்கள் ஏற்கனவே சொல்லி கொண்டிருக்கிறோம் அது வேறு. இப்போது யார் சொல்கிறார்? சி.ஏ.ஜி. சொல்கிறது. மத்திய கணக்கு துறையின் அறிக்கை சொல்கிறது. 7 விதமான ஊழல்கள் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

பாரத்மாலா திட்டம், துவாரகா விரைவு பாதை கட்டுமான திட்டம், சுங்க சாவடி கட்டணங்கள், ஆயுஷ்மான் பாரத் திட்டம், அயோத்தியா மேம்பாட்டு திட்டம், கிராமப்புற அமைச்சகத்தின் ஓய்வூதியத் திட்டம், எச்.ஏ.எல். விமான வடிவமைப்புத் திட்டம் என இந்த 7 திட்டங்களிலும் பல கோடி ரூபாய் ஊழல் நடந்திருக்கிறது என்று மிகத் தெளிவாக எடுத்து சொல்லி இருக்கிறது. நிதியை கையாளுவதில் மோசடிகள் அரங்கேறி இருக்கிறது என்று இந்த அறிக்கை பட்டவர்த்தனமாக அம்பலப்படுத்தி இருக்கிறது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில், 99999- 99999 என்ற ஒரே போலி செல்போன் நம்பரில் 7.5 லட்சம் பயனாளிகள் இணைக்கப்பட்டு ஊழல் நடந்திருக்கிறது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், சிகிச்சை பெற்ற நோயாளிகளில், 88 ஆயிரத்து 760 பேர் இறந்து விட்டார்கள். ஆனால், அவர்கள் இறந்த பிறகும், சிகிச்சை அளிக்கப்படுவதாக சொல்லி, 2 லட்சத்து 14 ஆயிரத்து 923 காப்பீட்டு

கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, காப்பீட்டு தொகை வழங்கப்பட்டிருக்கிறது. தகுதியில்லாத குடும்பங்கள் இந்த திட்டத்தின் பயனாளிகளாக பதிவு செய்யப்பட்டு, சுமார் 22 கோடியே 44 லட்சம் ரூபாய் வரை மோசடி நடந்திருக்கிறது. துவாரகா விரைவு நெடுஞ்சாலைத் திட்டத்தில், ஒரு கிலோ மீட்டருக்கு 18 கோடி ரூபாயாக இருந்த செலவு 250 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. திட்ட மதிப்பை விட, 278 மடங்கு கூடுதல் செலவு செய்யப்பட்டிருக்கிறது. அயோத்தியில் ராமாயணம் தொடர்புடைய இடங்களை நவீனப்படுத்துகிறோம் என்று சொல்லி ஒரு திட்டம் போட்டிருக்கிறார்கள். இதில் விதிமுறைகளை மீறி ஒப்பந்ததாரர்களுக்கு தேவையற்ற சலுகைகள் தரப்பட்டிருக்கிறது. இதனால் அரசுக்கு 8 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. பாரத்மாலா திட்ட டெண்டர் முறைகேடுகளை சி.ஏ.ஜி. அம்பலப்படுத்தி இருக்கிறது.

ஒரு கிலோ மீட்டர் தொலைவு நெடுஞ்சாலை அமைக்க நிர்ணயித்ததைவிட, இரண்டு மடங்கு அதிகமாக நிதி வழங்கப்பட்டிருக்கிறது. நாடு முழுவதும் சுமார் 600 சுங்கசாவடிகள் இருக்கிறது. இதில் 5 சுங்கசாவடிகளை மட்டும் சி.ஏ.ஜி. ஆய்வு செய்திருக்கிறது. அதில் விதிகளுக்கு புறம்பாக, 132 கோடியே 5 லட்சம் ரூபாயை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வாகன ஓட்டிகளிடம் இருந்து வசூலித்திருக்கிறார்கள் என்று தெரிய வந்திருக்கிறது. தமிழ்நாட்டில் இருக்கும் பரனூர் சுங்கச்சாவடியும் இதில் ஒன்று. இந்த ஒரே ஒரு சுங்கச்சாவடியில் மட்டும் ஆறரை கோடி ரூபாய் முறைகேடாக வசூலித்திருக்கிறார்கள். எனவே நாடு முழுவதும் ஆய்வு நடத்தினால், பல ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு வெளிச்சத்திற்கு வரும் என்று அந்த ஆய்வறிக்கை சொல்கிறது.

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் விமான இயந்திரம் வடிவமைப்பில் 159 கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தி இருக்கிறார்கள். ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் ஓய்வூதியத் திட்ட பணத்தை எடுத்து ஒன்றிய அரசு விளம்பரத்துக்காக பயன்படுத்தி இருக்கிறார்கள். அதே சி.ஏ.ஜி. அறிக்கையின்படி, ஒன்றிய அரசு துறைகளில் ஏழரை லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்திருக்கிறது. ஊழலை பற்றி ஒன்றிய அமைச்சர் அமித்ஷா அதிகம் கவலைப்படுகிறார். இன்னொரு அமைப்பு சென்ட்ரல் விஜிலென்ஸ் கமிஷன், அதாவது சி.வி.சி. என்ன சொல்கிறது என்றால், ஒன்றிய ஊழல் கண்காணிப்பு ஆணையம் சில நாட்களுக்கு முன்பு அறிக்கை வெளியிட்டு இருக்கிறது.

ஒன்றிய அமைச்சகங்களிலேயே உள்துறை அமைச்சக அதிகாரிகள், அலுவலர்கள் மேல்தான் கடந்த வருடம் அதிகமான ஊழல் புகார்கள் பதிவாகி இருக்கிறது. ஒன்றிய அமைச்சகங்கள் மற்றும் நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு எதிராக, கடந்த ஆண்டு மட்டுமே 1 லட்சத்து 15 ஆயிரத்து 203 புகார்கள் பதிவாகி இருக்கிறது. இதில் உள்துறை அதிகாரிகள் மீது மட்டும் 46 ஆயிரத்து 643 புகார்கள் பதிவாகி இருக்கிறது. இவர்கள் தான் ஊழலை ஒழிக்க போகிறோம் என்று இன்றைக்கு பேசிக் கொண்டிருக்கிறார்கள். நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

எனவே இவர்கள் செய்த தவறை எல்லாம் மூடி மறைத்து, நம்மீது வீண்பழியை சுமத்தி, இவற்றை பற்றி எல்லாம் திமுக பேசுகிறதே, திமுக கூட்டணி கட்சிகள் பேசுகிறதே என்று ஆத்திரம் ஏற்பட்டு, கோபம் ஏற்பட்டு, எரிச்சலில் நம்மை பழி வாங்குவதற்காக இன்றைக்கு சி.பி.ஐ., அமலாக்கத்துறை, வருமானவரித்துறை என்று நம்மை எல்லாம் மிரட்டி பார்க்கிறார்கள். இதையெல்லாம் கண்டு அஞ்சி நடுங்கிவிடுகிற கட்சி திமுக அல்ல. திமுக என்பது பனங்காட்டு நரி. இந்த சலசலப்புக்கு எல்லாம் நாம் அஞ்சி விடமாட்டோம். எப்படி தமிழ்நாட்டில் ஒரு நல்லாட்சி உருவாகுவதற்கு, திராவிட மாடல் ஆட்சி உருவாக்குவதற்கு காரணமாக இருந்தீர்களோ, அதேபோல் வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் ஒன்றியத்தில் ஒரு சிறப்பான ஆட்சி உருவாக நீங்கள் எல்லாம் காரணமாக இருக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

*மும்பை கூட்டத்தில் முக்கிய முடிவு
முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ‘இந்தியா கூட்டணியின் மூன்றாவது கூட்டம் ஆக.31, செப்.1 ஆகிய 2 நாட்கள் மும்பையில் நடைபெற இருக்கிறது. அதில் முக்கிய முடிவுகளை அறிவிக்க இருக்கிறோம். நானும் அந்த கூட்டத்திற்கு செல்ல இருக்கிறேன்’ என்றார்.

* சி.ஏ.ஜி. என்ன சொல்கிறது என்றால், ஒன்றியத்தில் நடைபெறும் பாஜக ஆட்சி, ஊழல் ஆட்சி. முறைகேடுகள் அதிகம் கொண்ட ஆட்சி. லஞ்ச லாவண்யம் பெருத்து போன ஆட்சி என்று சொல்கிறது.

* ஒன்றிய அமைச்சகங்களிலேயே உள்துறை அமைச்சக அதிகாரிகள், அலுவலர்கள் மேல்தான் கடந்த வருடம் அதிகமான ஊழல் புகார்கள் பதிவாகி இருக்கிறது என்று ஒன்றிய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

* ஒன்றிய அமைச்சகங்கள் மற்றும் நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு எதிராக, கடந்த ஆண்டு மட்டுமே 1 லட்சத்து 15 ஆயிரத்து 203 புகார்கள் பதிவாகி இருக்கிறது. இதில் உள்துறை அதிகாரிகள் மீது மட்டும் 46 ஆயிரத்து 643 புகார்கள் பதிவாகி இருக்கிறது.

You may also like

Leave a Comment

five + twenty =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi