தண்டையார்பேட்டை: மூலக்கொத்தளம் மயானத்தில் மொழிப்போர் தியாகிகள் நினைவிடம் முக்கிய தலைவர்களின் சமாதி உள்ளது. இங்குள்ள எரிவாயு தகன மேடை பழுதடைந்ததால், சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதன்பேரில், மாநகராட்சி நிதி ரூ.1.4 கோடி மதிப்பீட்டில் நவீன எரியூட்டு தகனமேடை அமைக்கப்பட்டது. இதற்கான பணிகள் முடிந்த நிலையில், இதனை ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம் மூர்த்தி, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நேற்று திறந்து வைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘மூலக்கொத்தளம் மயானத்திற்கு விரைவில் மதில்சுவர் அமைக்கப்படும். மயானத்தை நவீனப்படுத்தி தரம் உயர்த்தும் பணியும் நடைபெறும். 53வது வார்டுக்கு உட்பட்ட வண்ணாரப்பேட்டை போஜராஜன் நகரில், ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. வரும் மே மாதம் 31ம் தேதிக்குள் பணிகள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும்.
இதனால் 50 ஆண்டு கால பிரச்னைக்கு தீர்வு காணப்படும்,’’ என்றார். நிகழ்ச்சியில், ராயபுரம் மேற்கு பகுதி செயலாளர் சுரேஷ், மாமன்ற உறுப்பினர் வேளாங்கண்ணி, திமுக வட்ட செயலாளர் கவுரீஸ்வரன், மண்டல அலுவலர் தமிழ்ச்செல்வன், பகுதி செயற்பொறியாளர் லாரன்ஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.