சென்னை: விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 12 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாட்டில் ஸ்குவாஷ் உலகக் கோப்பை போட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ வணிக வளாகத்தில் கடந்த 13ம் தேதி தொடங்கியது. இதில் 8 அணிகள் உலக அளவில் பங்கேற்றனர். இதில் இறுதிப்போட்டியில் எகிப்து அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதனை தொடர்ந்து நடைபெற்ற உலக கோப்பை ஸ்குவாஷ் போட்டி நிறைவு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள் வழங்கி கவுரவித்தார்.
பின்னர் உரையாற்றிய அவர்; சென்னை உலக ஸ்குவாஷ் போட்டியில் வென்றவர்களுக்கு வாழ்த்துகள். செஸ் ஒலிம்பியாட் போட்டியை தமிழ்நாடு அரசு சிறப்பாக நடத்தியதை வீரர்களே பாராட்டினர். செஸ் ஒலிம்பியாட் போட்டி நடத்த திட்டமிட்ட உடனேயே அதற்கான நிதி ஒதுக்கீடு செய்ய அரசு ஆணையிட்டது. உலகமே வியக்கும் அளவுக்கு போட்டியையும் நாம் நடத்தி காட்டினோம். தமிழ்நாட்டில் எப்படி அன்பும் மரியாதையுடனும் மதிக்கப்பட்டோம் என்பதை செஸ் ஒலிம்பியாட் வீரர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். விளையாட்டு வீரர்களின் கவனத்தை ஈர்க்கும் மாநிலமாக அமைய இது காரணமாக இருக்கும். செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை முடித்த பிறகு பன்னாட்டு போட்டிகளை நடத்தும் சிறந்த இடமாக தமிழ்நாடு விளங்குகிறது.
உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டிக்கு குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. விளையாட்டுத் துறை கேப்டனாக இருந்து அனைத்து விளையாட்டு வீரர்களையும் சாம்பியன்களாக மாற்றி வருகிறார் அமைச்சர் உதயநிதி. விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஸ்குவாஷ் போட்டியின் இந்திய அணியில் 4 பேரில் 3 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். வீரர்கள் மூவரும் தமிழ்நாடு ஸ்குவாஷ் சங்கத்தில் பயிற்சி பெற்றவர்கள் என்பதில் பெருமிதமாக உள்ளது. கேலோ இந்தியா விளையாட்டு போட்டி தமிழ்நாட்டில் நடைபெற உள்ளது எனவும் கூறினார்.