ஐஸ்வால்: மிசோரம் ரயில்வே பாலம் இடிந்து விழுந்த விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதி என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். மிசோரம் மாநிலம் சாய்ரங்க் என்ற பகுதியில் கட்டப்பட்டு வந்த ரயில்வே பாலம் இடிந்து விழுந்து விபத்திற்குள்ளானது. 17 தொழிலாளர்கள் உயிரிழப்பு என தகவல் வெளியாகியுள்ளது.
மிசோரம் மாநிலத்தில் கட்டப்பட்டு வந்த ரயில்வே பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 17 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். ஐஸ்வாலில் இருந்து சுமார் 21 கிமீ தொலைவில் காலை 10 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
பாலம் இடிந்து விழுந்தபோது 40க்கும் மேற்பட்டோர் அந்த இடத்தில் இருந்ததால் மேலும் பல தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இடிந்து விழுந்த ரயில்வே பாலத்தின் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதி வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது; “மிசோரமில் பாலம் விபத்துக்குள்ளானது வேதனை அளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும். மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருகின்றன. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதி வழங்கப்படும் மற்றும் காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்படும்” என பிரதமர் தெரிவித்துள்ளார்.