திருவள்ளூர்: வேளகாபுரம் கிராமத்தில் மியாவாக்கி காடு உருவாக்கும் திட்டத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார். திருவள்ளூர் அடுத்த பூண்டி ஒன்றியம், வேளகாபுரம் கிராமத்தில் சென்னையில் உள்ள சிப் அகாடமி, திருவள்ளூரில் உள்ள ஐ.ஆர்.சி.டி.எஸ். தொண்டு நிறுவனம் இணைந்து மியாவாக்கி (அடர்வனம்) காடு உருவாக்கும் திட்டத்தினை செயல்படுத்தும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. சிப் அகாடமியின் மேலாண்மை இயக்குனர் தினேஷ் விக்டர் இதில் தலைமை தாங்கினார். நிதி இயக்குனர் சரளா முன்னிலை வகித்தார். ஐ.ஆர்.சி.டி.எஸ் தொண்டு நிறுவன இயக்குனர் ஸ்டீபன் அனைவரையும் வரவேற்றார். கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், அவரது துணைவியார் கோபிகா ராஜிவ் ஆகியோர் மாணவ, மாணவிகளுடன் இணைந்து செடியினை நட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.
பிறகு கலெக்டர் பேசும்போது, காலநிலை மாற்றமானது அடுத்த தலைமுறைக்கு மிகவும் அச்சுறுத்தலாக இருக்கும். ஆகவே இதுபோன்ற மரக்கன்றுகள் நடுதல், காடு வளர்ப்பு போன்ற செயல்பாடுகள் மிகவும் முக்கியமானது. சிறுவர், சிறுமியர்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நடுதல் போன்றவைகளின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது மிகவும் அவசியமானது என்றார். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் மணிசேகர், ஊராட்சித் தலைவர் ஹரி, கிராம நிர்வாக அலுவலர் பரத், ஐ.ஆர்.சி.டி.எஸ். திட்ட மேலாளர் விஜயன், கள ஒருங்கிணைப்பாளர்கள் தினகரன், பழனி மற்றும் கிராம தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து பலவகையான மரக்கன்றுகள் நடப்பட்டன.