கார்டூம்: சூடானில் ஏவுகணை தாக்குதலில் திசைமாறி சென்றதால் அப்பாவி பொதுமக்கள் 16 பேர் பரிதாபமாக இறந்தனர். ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. இந்த ஆட்சியை எதிர்த்து துணை ராணுவத்தினர் போராடி வருகிறார்கள். இதனால் இருதரப்புக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த உள்நாட்டு கலவரத்தில் இதுவரை 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர். இந்நிலையில் தலைநகர் கார்டூமிற்கு மேற்கே ஒம்துர்மன் நகரில் ராணுவ தளத்தின் முகாம் ஒன்று அமைந்துள்ளது.
இதன் மீது துணை ராணுவத்தினர் ஏவுகணைகளை வீசி திடீர் தாக்குதல் நடத்தினர். இது திசைமாறி அருகே உள்ள மார்க்கெட் பகுதியில் விழுந்தது. இதில் அப்பாவி பொதுமக்கள் 16 பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தனர். கட்டிட இடிபாடுகளில் சிக்கி 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இந்த செயலுக்கு ஐ.நா. சபை கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.