சென்னை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் இன்று மாலை பிரசாரம் செய்கிறார். தொடர்ந்து அவர் ஆரணி, திருவண்ணாமலையிலும் வாக்கு சேகரிக்கிறார். திமுக இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். விருதுநகர் காரியாபட்டியில் பிரசாரத்தை தொடங்கிய அவர் அருப்புக்கோட்டை, மதுரை திருமங்கலம், உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி ஆகிய ஊர்களுக்கு சென்று திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். நேற்று தேனி, திண்டுக்கல், மதுரையில் பிரசாரம் செய்தார். அதன்பிறகு அவர் நேற்று இரவு சென்னை திரும்பினார்.
சென்னை திரும்பியுள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (திங்கட்கிழமை) மாலை 5 மணியளவில் காஞ்சிபுரம் சென்று திமுக வேட்பாளரை ஆதரித்து காஞ்சிபுரம் பெரியார் தூண் காந்தி சாலையில் திறந்த வேனில் பிரசாரம் செய்கிறார்.
மேலும் பொதுமக்களிடம் வாக்குகளை சேகரிக்கிறார். அதன்பிறகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தொகுதிக்கு உட்பட்ட செய்யாறு, வந்தவாசி, சேத்துப்பட்டு ஆகிய ஊர்களில் பேசுகிறார்.
இரவில் திருவண்ணாமலை கீழ் பெண்ணாத்தூர் பஸ் நிலையம் அருகே பேசுகிறார். தொடர்ந்து நாளை அவர் திருவண்ணாமலை, வேலூரிலும், 27ம் தேதி அரக்கோணம், பெரும்புதூரிலும் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். தொடர்ந்து அவர் இரண்டாம் கட்ட பிரசாரத்தை தொடங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.