Thursday, May 2, 2024
Home » போக்குவரத்து கழகங்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற 612 பேருக்கு ரூ171 கோடிக்கான காசோலை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

போக்குவரத்து கழகங்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற 612 பேருக்கு ரூ171 கோடிக்கான காசோலை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

by Neethimaan

சென்னை: மாநகரம் மற்றும் அரசு விரைவு போக்குவரத்து கழகங்களில் பணிபுரிந்து, ஓய்வு பெற்ற, விருப்ப ஓய்வு பெற்ற, இறந்த பணியாளர்கள் என 612 பேருக்கு ரூ171.23 கோடிக்கான காசோலைகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் மே 2020 முதல் நவம்பர் 2022 வரை பணிபுரிந்து ஓய்வு பெற்ற, விருப்ப ஓய்வு பெற்ற இறந்த பணியாளர்கள் என மொத்தம் 6,261 பேருக்கு வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை விடுப்பு ஒப்படைப்பு தொகை மற்றும் ஓய்வூதிய ஒப்படைப்பு தொகை உள்ளிட்ட பணப் பலன்கள் ரூ1,582.44 கோடி வழங்கிட உத்தரவிட்டார்.

அதனை தொடர்ந்து, முதற்கட்டமாக கடந்த 2022 ஆண்டு போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் கடந்த மே 2020 முதல் மார்ச் 2021 வரையிலான காலகட்டத்தில் 1,241 பேருக்கும், இரண்டாம் கட்டமாக கடந்த 27.3.2023 அன்று ஏப்ரல் 2021 முதல் மார்ச் 2022 வரை பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்ற, இறந்த பணியாளர்கள் என மொத்தம் 1,626 பேருக்கு வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை விடுப்பு ஒப்படைப்பு தொகை மற்றும் ஓய்வூதிய ஒப்படைப்பு தொகை உள்ளிட்ட பண பலன்கள் ரூ308.45 கோடி வழங்கினார். இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் கடந்த ஏப்ரல் 2022 முதல் நவம்பர் 2022 வரை பணிபுரிந்து ஓய்வு பெற்ற, விருப்ப ஓய்வு, இறந்த பணியாளர்கள் என மொத்தம் 3,414 பேருக்கு வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை, விடுப்பு ஒப்படைப்பு தொகை மற்றும் ஓய்வூதிய ஒப்படைப்பு தொகை உள்ளிட்ட பண பலன்கள் ரூ1,031.32 கோடி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து சென்னையில் நேற்று கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் முன்னிலையில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாநகர் போக்குவரத்து கழகத்தை சார்ந்த 441 பேருக்கு ரூ115.47 கோடி மற்றும் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தை சார்ந்த 171 பேருக்கு ரூ55.76 கோடி என மொத்தம் 612 பேருக்கு ரூ171.23 கோடிக்கான காசோலைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியின்போது மயிலாப்பூர் தொகுதி எம்எல்ஏ த.வேலு, போக்குவரத்து துறை கூடுதல் தலைமை செயலாளர் பணீந்திரரெட்டி, மாநகர் போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் அன்பு ஆபிரகாம், அரசு விரைவுப் போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் இளங்கோவன் மற்றும் உயர் அலுவலர்கள் மற்றும் வி.ஆர்.ரவி, தொழிற்சங்க பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.

போக்குவரத்து கழகம்தனியார்மயமாகாது: அமைச்சர் சிவசங்கர் தகவல்
விழாவில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேசியதாவது:போக்குவரத்து கழகங்களை நாட்டுடமையாக்கியவர் கலைஞர். தமிழகத்தில் 21 ஆயிரம் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது. கலைஞர் வழியில் வந்த ஆட்சியில் போக்குவரத்து கழகம் ஒருபோதும் தனியார் மயம் ஆகாது. தற்போது புதிய பணியாளர்களை நியமிக்க, புதிய பேருந்துகளை வாங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அப்படி இருக்கும்போது போக்குவரத்து துறை எப்படி தனியார் மயம் ஆகும். அதிமுக ஆட்சியில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு ஒப்பந்தம் முறையாக நிறைவேற்றவில்லை. தீபாவளி, பொங்கலில் கடந்த ஆட்சி காலத்தில் இருந்த பிரச்னைகள் இப்போது ஏற்படாதவாறு தேவையான அளவு பேருந்துகள் இயக்கப்படுகிறது. மாநகர பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் திட்டத்தால் தமிழக மக்கள் மகிழ்ச்சியோடு அரசு பேருந்துகளில் பயணம் செய்து வருகிறார்கள் என்றார்.

You may also like

Leave a Comment

fourteen − 11 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi