சென்னை: சென்னை எழிலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் நேற்று அளித்த பேட்டி: புயல் மற்றும் மழை காரணமாக நேற்று வரை (5ம் தேதி) 8 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல் 411 நிவாரண முகாம்களில் 18,299 பேர் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறோம். தேசிய பேரிடர் மீட்பு படையினர் 750 பேர் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 2015ஐ விட நேற்றைய தினம் பொழிந்த மழை கூடுதலாகவே இருந்தது. அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக சென்னைக்கு மிகப்பெரிய ஆபத்தில்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. படிப்படியாக தேங்கிய பகுதிகளில் மழைநீரை அகற்றும் முயற்சிகளில் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகளின் ஒருங்கிணைப்போடு ஈடுபட்டு வருகிறோம்.
சென்னை புறநகரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நாளை (இன்று) முதல் ஹெலிகாப்டர் மூலம் உணவு விநியோகம் செய்யப்படும். இந்த பகுதிகளில் இதுவரை 18 லட்சம் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக வெள்ள நீர் சூழ்ந்து தெருக்களுக்கு வர முடியாமல் பாதிக்கப்பட்டு பலமாடி கட்டிடங்களில் தங்கி உள்ளவர்கள் சாப்பாட்டுக்கு கஷ்டப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. அதனால் மாடிகளில் தங்கியுள்ளோருக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவு வழங்க தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது. 6ம் தேதி (இன்று) காலை 7.30 மணி முதல் இந்த பணிகள் துவங்கும். 208 படகுகள் மூலமும் மீட்பு பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. நேற்று மாலையும் ஹெலிகாப்டர் மூலம் 20 ஆயிரம் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது.