சென்னை: தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இன்று இதய அறுவை சிகிச்சை செய்யப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செட்டித்தோட்டம், ஆடுதொட்டி உள்ளிட்ட பகுதியில் ஆய்வு செய்தார். பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மூன்று ரத்த குழாய் அடைப்புகள் உள்ளது. அதுவும் ஆபத்தான நிலையில் உள்ளது என ஓமந்தூரார் மருத்துவமனை தெரிவித்திருந்தது. அதன் அடிப்படையில் அவர் அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்காக காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். உடனடியாக அவருக்கு சிகிச்சை தரவேண்டும் என்பதற்காக ஓமந்தூரார் மருத்துவமனையில் பிளட் தின்னர் (Blood thinner) என்ற சிகிச்சை வழங்கினர்.
அது வழங்கி 5 அல்லது 6 நாட்களுக்குப் பிறகு தான் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்ற நிலை உள்ளது. அந்த வகையில் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட இருக்கிறது. அதுவும் நாளை (இன்று) அதிகாலை செய்யப்படுகிறது.
விசாரணைக்கும் அறுவை சிகிச்சைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவருக்கு ரத்த குழாய் அடைப்பு உள்ளது என்று ஓமந்தூரார் மருத்துவமனை டாக்டர்கள் பரிந்துரை செய்திருந்தாலும் இரண்டாம் கட்ட கருத்தாக அவர்களுடைய குடும்ப மருத்துவரை அழைத்து வந்து பரிசோதனை செய்தனர். இதை தவிர அமலாக்க துறையினர் தங்களது கடமை என்று இஎஸ்ஐ மருத்துவரை அழைத்து வந்து பரிசோதனை செய்தனர்.
இதில் அனைத்திலும் ரத்தக்குழாய் அடைப்பு உள்ளது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, தற்போது அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் வழக்கு கொடுத்திருப்பது தமிழகத்தில் உள்ள 20,000 அரசு மருத்துவர்கள், ஒட்டுமொத்த இந்தியாவில் உள்ள லட்சக்கணக்கான இஎஸ்ஐ மருத்துவர்கள் ஆகியோரது நேர்மையையும் குணத்தையும் சந்தேகிக்கக் கூடிய வகையில் உள்ளது என்றார். அமலாக்க துறையினர் தங்களது கடமை என்று இஎஸ்ஐ மருத்துவரை அழைத்து வந்து பரிசோதனை செய்தனர். இதில் அனைத்திலும் ரத்தக்குழாய் அடைப்பு உள்ளது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.