புதுடெல்லி: போயிங் 737-8 விமானங்களின் சோதனையானது திருப்திகரமாக நிறைவடைந்துள்ளதாக இந்திய உள்நாட்டு விமான போக்குவரத்து இயக்குனரகம் தெரிவித்துள்ளது. அலாஸ்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 737 மேக்ஸ் 9 ரக விமானமானது 5ம் தேதி அமெரிக்காவின் ஓரேகானின் போர்ட்லேண்டில் இருந்து கலிபோர்னியாவின் ஒண்டாரியோவுக்கு புறப்பட்டு சென்றது. விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் விமானத்தின் கதவானது தனியாக கழன்று விழுந்தது.
இந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து போயிங் 737-8 மேக்ஸ் விமானங்களில் அவசரகால கதவுகளை உடனடியாக சோதனை செய்யும்படி உள்நாட்டு விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து இயக்குனகரம் சனியன்று உத்தரவிட்டு இருந்தது.
இதனை தொடர்ந்து நேற்று விமான போக்குவரத்து துறை இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,‘‘ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்(4), ஸ்பைஸ்ஜெட்(8), ஆகாசா(20) ஆகியவற்றின் போயிங் பி737-8 மேக்ஸ் விமானங்களின் செயல்பாட்டு சோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. அவசரகால கதவுகள் அனைத்தும் சோதனை செய்யப்பட்டன. இந்த சோதனைகள் திருப்திகரமாக நிறைவடைந்துள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.