சென்னை: சென்னை எம்ஜிஆர் திரைப்படக் கல்லூரி பகுதிநேர தற்காலிக விரிவுரையாளர் நியமனத்திற்கான அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது. விரிவுரையாளர் பணிக்கு தகுதியாக இந்தி, சமஸ்கிருதம் சேர்க்கப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பணிக்கான அறிவிப்பு திரும்ப பெறப்பட்டது. சினிமாவில் உள்ள முக்கிய பிரிவுகளுக்கான பாடப்பிரிவுகளை உள்ளடக்கிய பட்டப்படிப்புகள், தமிழ்நாடு அரசு எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தால் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிறுவனத்தில் இளங்கலை காட்சிக்கலை, ஒளிப்பதிவு, எண்மிய இடைநிலை, ஒலிப்பதிவு, இயக்குதல் மற்றும் திரைக்கதை எழுதுதல், படத்தொகுப்பு மற்றும் உயிர்ப்பூட்டல், காட்சிப்பயன் பட்டப்படிப்பில் பயிலும் மாணவர்களுக்காக பாடத்திட்டங்கள் பயிற்றுவிப்பதற்கு பகுதி நேர கௌரவ விரிவுரையாளராக பணியாற்றிட விருப்பமுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் என்று அறிவிப்பு வெளியானது. இதில தமிழ், ஆங்கிலம் இந்தி மற்றும் சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் முதுநிலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழ்நாடு அரசு எம் ஜி ஆர் திரைப்பட பயிற்சி நிறுவனத்தின் பகுதி நேர கெளரவ விரிவுரையாளர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் சமஸ்கிருதம் அல்லது ஹிந்தியில் முதுகலை பட்டம் பெற்றவராக ஏன் இருக்க வேண்டும் என்று சு.வெங்கடேசன் எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார். பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அந்த அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டது.
நிர்வாக காரணங்களுக்காக 21.06.2203 அன்று நாளிதழ்களில் வெளியிடப்பட்ட தற்காலிக பகுதிநேர கெளரவ விரிவுரையாளர் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு செ.ம.தொ.இ/682/வரைகலை/2023 என்ற விளம்பரம் எண் இதன்படி மீளப்படுகிறது என்று அறிவித்துள்ளனர்.