கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே கல்லார் சாலையில் சென்று கொண்டிருந்த காரில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சென்னை சூளைமேட்டை சேர்ந்தவர் சரண் கிஷோர். இவர் தனது நண்பர்கள் வசீகரன், ஜெகதீஷ் ஆகியோருடன் சென்னையில் இருந்து நீலகிரி மாவட்டம் உதகைக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். மேட்டுப்பாளையத்தில் உள்ள கேஸ் பங்கில் கேஸ் நிரப்பிவிட்டு குன்னூர் சாலை வழியாக உதகை சென்று கொண்டிருந்தனர்.
அப்போது முதல் கொண்டை ஊசி வளைவு பகுதியில் சென்று போது, எதிர்பாராத விதமாக காரில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறியுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த சரண் கிஷோர் மற்றும் அவரது நண்பர்கள், காரை விட்டு இறங்கி ஓடினர். பின்னர் கார் மளமளவென தீப்பற்றி எரியத் தொடங்கியது. மேலும் இது குறித்து மேட்டுப்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு சென்ற தீயணைப்புத்துறையினர், சுமார் அரை மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். எனினும் கார் முற்றிலும் எரிந்து சாம்பலானது. தீ விபத்து குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.