ஆசிய விளையாட்டு போட்டித் தொடரின் ஆண்கள் டி20 கிரிக்கெட் போட்டியில் முதல் முறையாகக் களமிறங்கிய இந்திய அணி தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தது. ஹாங்சோவில் நேற்று நடந்த பரபரப்பான பைனலில் இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. தொடக்கத்தில் சற்று தடுமாறிய ஆப்கான் 10.5 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 52 ரன் மட்டுமே எடுத்திருந்தது. பின்னர் அதிரடியில் இறங்கிய அந்த அணி 18.2 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 112 ரன் எடுத்திருந்தபோது கனமழை கொட்டியதால் ஆட்டம் தடைபட்டது.
ஷாகிதுல்லா 49, கேப்டன் குல்பாதின் நயிப் 27 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய பந்துவீச்சில் அர்ஷ்தீப், ஷிவம் துபே, ஷாபாஸ், பிஷ்னோய் தலா 1 விக்கெட் வீழ்த்தி இருந்தனர். மழை நிற்காமல் தொடர்ந்து பெய்ததால், ஆட்டம் முடிவு இன்றி கைவிடப்பட்டது. இதையடுத்து, ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் இந்தியா வென்றதாக அறிவிக்கப்பட்டு தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது. ஆப்கான் வெள்ளிப் பதக்கத்துடன் திருப்தி அடைந்தது.
வங்கதேசத்துக்கு வெண்கலம்: 3வது இடத்துக்கான போட்டியில் நேற்று பாகிஸ்தான் – வங்கதேசம் மோதின. மழையால் தாமதமாகத் தொடங்கிய ஆட்டத்தில், பாகிஸ்தான் 5 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 48 ரன் எடுத்திருந்தபோது மீண்டும் மழை குறுக்கிட்டது. நீண்ட காத்திருப்புக்குப் பின்னர் தலா 5 ஓவர் கொண்ட போட்டியாக அறிவித்த நடுவர்கள், வங்கதேசத்துக்கு டிஎல்எஸ் விதிப்படி 5 ஓவரில் 65 ரன் எடுத்தால் வெற்றி என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதிரடியாக ஆடிய வங்கதேசம் 5 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 65 ரன் எடுத்து வென்று வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியது.