சென்னை: சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது குளித்தலை மாணிக்கம்(திமுக) பேசுகையில் ‘‘நங்கவரத்தில் முன்னாள் முதலமைச்சர் கலைஞருக்கு நினைவுச்சின்னம் அமைக்க அரசு ஆவண செய்யுமா? ” என்றார். இதற்கு பதில் அளித்து செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசுகையில், ‘‘மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் போராட்டம் வரலாற்றில் குறிப்பிடப்பட வேண்டியது.
தாய்மொழிக்கான போராட்டம், விவசாயிகளுக்கான போராட்டம், தொழிலாளர்களுக்கான போராட்டம் என பல்வேறு போராட்டங்களை நடத்தியவர். குளித்தலையில் விவசாயிகளுக்காக அவர் போராடிய போராட்டம் வரலாற்றில் இடம்பெற்றுள்ளது. அவரது பிறந்த நாளான நூற்றாண்டு விழாவில் குளித்தலையில் கலைஞர் நினைவுச் சின்னம் அமைக்க முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு பரிசீலிக்கப்படும்”, என தெரிவித்தார்.