மதுராந்தகம்: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் ஆன்மிக குரு பங்காரு அடிகளாரின் 84வது பிறந்தநாள் விழா இன்று காலை நடைபெற்றது. ஆன்மிக குரு பங்காரு அடிகளாரின் இல்லத்தில் இருந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் பங்காரு அடிகளாரின் சிலையை வைத்து லட்சக்கணக்கான பக்தர்களி, மயிலாட்டம், ஒயிலாட்டம், தாரை தப்பட்டை முழங்க வாணவேடிக்கையுடன் ஊர்வலமாக சித்தர்பீடம் எடுத்து சென்றனர்.
இதையடுத்து கருவறையில் உள்ள ஆதிபராசக்தி அம்மனுக்கு தீபாராதனை செய்யப்பட்டது. குருபீடத்தில் பங்காரு அடிகளாரின் சிலைக்கு மலர்மாலை அணிவித்து மூலமந்திரம் முழங்க 108 குரு போற்றியுடன் மகாதீபாராதனை செய்யப்பட்டது. இதில் பங்கேற்ற லட்சக்கணக்கான பக்தர்கள் ஓம்சக்தி, பராசக்தி, பங்காரு அம்மா வாழ்க என கோஷமிட்டனர். இதைத்தொடர்ந்து ஆன்மிக குரு பங்காரு அடிகளாரின் திருபாதுகைகளுக்கு பக்தர்கள் பாத பூஜை செய்து தரிசனம் செய்தனர்.
இன்று மாலை 3.30 மணி அளவில் மக்கள் நலப்பணி விழா மற்றும் விழா மலர் வெளியிடும் நிகழ்ச்சி ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க கலை அரங்கில் நடைபெற உள்ளது. நிகழ்ச்சியில், அமைச்சர்கள் துரைமுருகன், தா.மோ.அன்பரசன், நாடாளுமன்ற உறுப்பினர் ெஜகத்ரட்சகன் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்க உள்ளனர். நிகழ்ச்சியில், ₹3.25 கோடி மதிப்பீட்டில் மக்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார், துணை தலைவர்கள் அன்பழகன், செந்தில்குமார், ஸ்ரீதேவி ரமேஷ், தொழிலதிபர் ஜெய்கணேஷ், ஆதிபராசக்தி கல்லூரி தாளாளர் உமாதேவி, ஆன்மிக இயக்க தலைமை செயல் அதிகாரி வழக்கறிஞர் அகத்தியன் மற்றும் சேலம், நாமக்கல் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க பொறுப்பாளர்கள் செய்து வருகின்றனர்.