Wednesday, May 15, 2024
Home » மீஞ்சூரில் தலை, கைகள் துண்டித்து கொலையான விவகாரம்: இளம்பெண்ணை காதலித்து ஏமாற்றியதால் வாலிபர் தீர்த்துக்கட்டப்பட்டது அம்பலம்

மீஞ்சூரில் தலை, கைகள் துண்டித்து கொலையான விவகாரம்: இளம்பெண்ணை காதலித்து ஏமாற்றியதால் வாலிபர் தீர்த்துக்கட்டப்பட்டது அம்பலம்

by MuthuKumar

பொன்னேரி: மீஞ்சூரில் தலை, கைகள் துண்டித்து வாலிபர் கொலையான விவகாரத்தில் பெண்ணை காதலித்து ஏமாற்றியதால் வாலிபர் தீர்த்துக்கட்டப்பட்து அம்பலமானது. இது தொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார். 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பஜார் பகுதியில் நேற்று அதிகாலை துணியால் சுற்றப்பட்ட நிலையில் தலை, கைகள் துண்டிக்கப்பட்ட நிலையில் ஆண் சடலம் கிடந்தது. இதை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், மீஞ்சூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே ஆவடி சரக துணை ஆணையர் பாலகிருஷ்ணன், உதவி ஆணையர் ராஜாராபட், மீஞ்சூர் சட்டம்-ஒழுங்கு ஆய்வாளர் காளிராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

கொலை செய்யப்பட்டு கிடந்தவருக்கு சுமார் 30 வயது இருக்கும். தலை இல்லாமல் உடல் மட்டும் கிடந்தது. 2 கைகளும் துண்டிக்கப்பட்டிருந்தது. மர்ம நபர்களால் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்கு பதிந்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இதற்கிடையில், சோழவரம் அடுத்த பெருங்காவூர் கிராமத்தில் உள்ள சுடுகாட்டில் ஒரு சமாதியில் துண்டிக்கப்பட்ட தலை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இதை பார்த்ததும் அப்பகுதி மக்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். உடனே சோழவரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விரைந்து சென்று தலையை கைப்பற்றி விசாரித்தனர். இதில், பொன்னேரி அடுத்த வஞ்சிவாக்கம் கிராமத்தை சேர்ந்த அஸ்வின்குமார் (26) என்பதும் மீஞ்சூர் பஜார் பகுதியில் கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து உடல் இல்லாத தலையை மீட்டு மீஞ்சூர் போலீசில் ஒப்படைத்தனர். தலையையும் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

பின்னர் ஆவடி கமிஷனர் சங்கர் உத்தரவின் பேரில் மீஞ்சூர் இன்ஸ்பெக்டர் காளிராஜ் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இதில் மீஞ்சூர் அடுத்த வழுதிகைமேடு கிராமத்தை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான அஜீத் (எ) அவ்ஜா (21) என்பவரை தனிப்படை போலீசார் நேற்றிரவு கைது செய்தனர். பின்னர் அவரை காவல் நிலையத்துக்கு கொண்டு வந்து விசாரித்தபோது, ‘சித்தப்பா மகளை அஸ்வின் காதலித்து ஏமாற்றிவிட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதனால் தகராறு ஏற்பட்டது. இந்த முன் விரோதம் காரணமாக அஜய், மோகன், தேவராஜ் மற்றும் அம்பத்தூர் பகுதியை சேர்ந்த சிலருடன் சேர்ந்து அஸ்வின் குமாரை கொன்றது தெரியவந்தது. இந்த சம்பவத்தில் 4 பேரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

உண்மைக்கு புறம்பாக…
இந்த சம்பவத்தில் கொலை செய்யப்பட்ட வஞ்சிவாக்கத்தை சேர்ந்த அஸ்வின் குமார் என்பவரது தலை சோழவரம் அருகே உள்ள பெருங்காவூர் சுடுகாட்டில் உள்ள அஜித்குமார் என்பவரது கல்லறையில் கிடந்தது. உடல், மீஞ்சூர் பஜாரில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனால் பழிக்கு பழியாகத்தான் இந்த சம்பவம் நடந்திருக்கும் என்று அவர்களது உறவினர்கள் கூறுகின்றனர். மேலும், உறவுக்கார பெண்ணை காதலித்து திருமணம் செய்ய மறுத்ததால் கொலை நடந்துள்ளது என்று குற்றவாளி வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர். இது உண்மைக்கு புறம்பாக உள்ளது என்றும் உறவினர்கள் தெரிவித்தனர்.

You may also like

Leave a Comment

thirteen − five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi