நெல்லை: நெல்லை மாவட்டத்தின் ஆற்றங்கரை ஓரங்களிலும், குளக்கரை ஓரங்களிலும் சீமை அகத்தி செடிகள் அதிகளவு வளர்ந்துள்ளது. அகத்தி கீரையைப்போல் காணப்படும் இந்த சீமை அகத்தியில் மஞ்சள் நிறத்தில் பூக்கள் பூத்துக்குலுங்குவது கண்களுக்கு விருந்தளிக்கும். இதன் இலைகள், பூக்கள், தண்டுகள் மருத்துவ குணமுடையது என்று கூறப்படுகிறது.
தோல் வியாதிகளுக்கு சிறந்ததாகவும் உள்ளது. இதனை கேரள ஆயுர்வேத மருத்துவமனைகளுக்கு வியாபாரிகள் அதிகளவு வாங்கிச் செல்கின்றனர். இதற்காக நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விவசாய பணிகள் இல்லாத நேரங்களில் பொதுமக்கள், சீமை அகத்தி செடியின் இலைகளை பறித்து ஒரு வாரம் சூரிய ஒளியில் உலர்த்தி பக்குவப்படுத்துகின்றனர்.
பின்னர் கேரள வியாபாரிகளிடம் கிலோ ரூ.10க்கு விற்பனை செய்கின்றனர். விவசாய பணிகள் இல்லாத நாட்களில் நல்ல வருமானம் கிடைப்பதால், சீமை அகத்தி செடி இலையை பறிக்கும் பணியில் பெண் தொழிலாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.