சென்னை: தமிழகத்தில் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 2023-24 கல்வியாண்டுக்கான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கான முதல் சுற்று கலந்தாய்வு நிறைவடைந்தது. முதல் சுற்று கலந்தாய்வுக்குப் பிறகு அரசு ஒதுக்கீட்டில் 119 எம்.பி.பி.எஸ்., 85 பி.டி.எஸ். இடங்களும், நிர்வாக ஒதுக்கீட்டில் 648 எம்.பி.பி.எஸ், 818 பி.டி.எஸ். இடங்களும் காலியாக உள்ளன. இந்த நிலையில், அந்த இடங்களை நிரப்ப 2ம் சுற்று கலந்தாய்வு இணைய வழியே நாளை தொடங்குகிறது. இதுதொடர்பாக மருத்துவக் கல்வி, ஆராய்ச்சி இயக்ககத்தின் தேர்வுக்குழுவின் அறிக்கை: மருத்துவ சேர்க்கையின் 2ம் சுற்று கலந்தாய்வுக்கு தகுதியானவர்கள், வருகிற 21ம் தேதி காலை 10 மணி முதல் 22ம் தேதி மாலை 5 மணி வரை இணையதளங்களில் பதிவு செய்யலாம்.
வருகிற 24ம் தேதி காலை 10 மணி முதல் 28ம் தேதி மாலை 5 மணி வரை இடங்களை தேர்வு செய்ய வேண்டும். ஆகஸ்ட் 29, 30 ஆகிய தேதிகளில் தரவரிசைப்பட்டியல் அடிப்படையில் கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். இதைத் தொடர்ந்து வருகிற 31ம் தேதி இடங்கள் ஒதுக்கீடு குறித்த விவரங்கள் இணையதளங்களில் வெளியிடப்படும். செப்டம்பர் 1ம் தேதி முதல் 4ம் தேதி மாலை 5 மணி வரை கல்லூரிகளில் சேரும் ஆணையை பதிவிறக்கம் செய்யலாம். செப்டம்பர் 4ம் தேதி மாலை 5 மணிக்குள் இடஒதுக்கீடு பெற்ற கல்லூரிகளில் சேர வேண்டும்.