சென்னை: மே தினம் விடுமுறையை முன்னிட்டு ஞாயிறு அட்டவணைப்படி நாளை புறநகர் ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில்; மே தினத்தையொட்டி, புதன்கிழமை அரசு விடுமுறை என்பதால் புறநகர் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை சென்ட்ரலிருந்து அரக்கோணம், சூலூா்பேட்டை மற்றும் சென்னை கடற்கரை – செங்கல்பட்டு செல்லும் ரயில்கள், வேளச்சேரி வழித்தடத்தில் புறநகர் ரயில்கள் நாளை ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை மே 01 அரசு விடுமுறை தினம் என்பதால் சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாளை மே 01 சர்வதேச தொழிலாளர்கள் தினம் என்பதால், நாளைய தினம் மெட்ரோ ரயில்கள் சனிக்கிழமை அட்டவணை படி இயக்கப்படும். காலை 05.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். காலை 08.00 மணி முதல் நண்பகல் 11.00 மணி வரையும், மாலை 05.00 மணி முதல் இரவு 08.00 மணி வரையும் 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். இரவு 08.00 மணி முதல் நள்ளிரவு 10.00 மணி வரை 7 நிமிட இடைவெளியிலும், இரவு 10.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை 15 நிமிட இடைவெளியிலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.