Sunday, May 12, 2024
Home » மருதமலை சென்றபோது பணம் பறித்து பெற்றோர் மீது தாக்குதல் விமானத்தில் பறந்து சென்று திருநங்கையை வீடு புகுந்து கொன்ற சென்னை ஐ.டி.ஊழியர்: ஆளை மாற்றி கொன்றதாக வாக்குமூலம்

மருதமலை சென்றபோது பணம் பறித்து பெற்றோர் மீது தாக்குதல் விமானத்தில் பறந்து சென்று திருநங்கையை வீடு புகுந்து கொன்ற சென்னை ஐ.டி.ஊழியர்: ஆளை மாற்றி கொன்றதாக வாக்குமூலம்

by Karthik Yash

கோவை: மருதமலைக்கு சென்றபோது பணம் பறித்து பெற்றோர் மீது தாக்குதல் நடத்தியதால், சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை சென்று வீடு புகுந்து திருநங்கையை கொன்ற ஐ.டி.ஊழியர் கைது செய்யப்பட்டார். கோவை தெலுங்குபாளையம் எல்.ஐ.சி.காலனியை சேர்ந்தவர் தனலட்சுமி (39). திருநங்கை. இவர் கோவையில் உள்ள ஒரு ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றிவிட்டு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மும்பை சென்றார். இவரது தோழி மாசிலாமணி (32) என்ற திருநங்கை வடவள்ளி அருகே மருதமலை ரோட்டில் அன்னை இந்திரா நகரில் வசித்து வருகிறார். இவரது வீட்டில் மணி என்பவரும் வாடகைக்கு வசித்து வருகிறார்.

இந்நிலையில், தைப்பூசத்துக்காக மும்பையில் இருந்து கோவை திரும்பிய தனலட்சுமி, மாசிலாமணி வீட்டில் தங்கியிருந்தார். கடந்த மாதம் 29ம் தேதி மாசிலாமணி மற்றும் மணி வெளியே சென்றனர். வீட்டில் தனலட்சுமி மட்டும் தனியாக இருந்தார். அந்த நேரத்தில் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர், தனலட்சுமியை கொடூரமாக கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பினார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த வடவள்ளி போலீசார் 4 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தி வந்தனர். அதில், சென்னை மடிப்பாக்கம் அருகே புழுதிவாக்கத்தை சேர்ந்த ஐடி ஊழியர் தினேஷ் (எ) தினேஷ் ராமசாமி (38) திருநங்கை தனலட்சுமியை கொன்றது தெரிந்தது. இதையடுத்து அவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது: தினேஷ் அடிக்கடி கோவை மருதமலை முருகன் கோயிலுக்கு வருவார். கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி அன்று மருதமலைக்கு வந்த தினேஷ் பின்னர், மருதமலை பஸ் நிலையத்தில் அமர்ந்து இருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர் தினேஷை தாக்கிவிட்டு அவரிடம் இருந்த ஏடிஎம் கார்டு, பர்ஸ் ஆகியவற்றை பறித்து சென்றதாக தெரிகிறது. தொடர்ந்து கடந்த அக்டோபர் மாதம் அவர் மீண்டும் மருதமலைக்கு வந்தார். அப்போது அவர் தன்னை தாக்கி பணம் பறித்தவர்கள் அப்பகுதியில் உள்ளார்களா? என்று தேடிப்பார்த்தார்.

அப்போது திருநங்கை மாசிலாமணி, மணி வசித்து வந்த வீட்டின் அருகே தினேஷ் சென்று உள்ளார். இதனை பார்த்த மாசிலாமணி, மணி ஆகியோர் தினேஷிடம் சென்று நீ யார்? என்று கேட்டு உள்ளனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், தினேஷை அவர்கள் தாக்கினர். அந்த நேரத்தில் தினேஷை தேடி அவரது பெற்றோர் அங்கு வந்தனர். அப்போது, தினேஷ் பெற்றோரையும் மாசிலாமணி தாக்கி உள்ளார். தனது பெற்றோரை தனது கண்முன்னே தாக்கியதால் தினேஷுக்கு மாசிலமாணி மீது ஆத்திரம் ஏற்பட்டது.

அவரை பழிவாங்க நினைத்தவர், சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்து, கடந்த 29ம் தேதி இரவு மாசிலாமணியை கொல்ல அவரது வீட்டுக்கு சென்று உள்ளார். அங்கு மாசிலாமணி, மணி ஆகியோர் இல்லை. திருநங்கை தனலட்சுமி மட்டும் தூங்கிக்கொண்டு இருந்தார். அவர் தான் மாசிலாமணி என நினைத்து தினேஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தனலட்சுமியை குத்திக்கொலை செய்தார். திருநங்கை மாசிலாமணிக்கு பதிலாக தினேஷ் ஆளைமாற்றி தனலட்சுமியை கொன்றதாக தெரிவித்துள்ளார். கொலையை செய்துவிட்டு பழனிக்கு சென்று மொட்டையடித்து பின்னர் மதுரைக்கு சென்றார். அங்கு வைத்து தனிப்படை போலீசார் அவரை கைது செய்தனர்.
இவ்வாறு போலீசார் கூறினர்.

You may also like

Leave a Comment

five × 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi