பொன்னேரி,: பொன்னேரி அடுத்த பஞ்செட்டியில் பழமை வாய்ந்த ஸ்ரீ மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா கடந்த 3ம் தேதி விழா தொடங்கியது. கூழ் வார்த்தல், பொங்கல் வைத்தல், தினமும் காலை, மாலை, இரவு வேளையில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகம், ஆராதனை நடந்தது. தினமும் அம்மன் வீதியுலா நிகழ்ச்சியும் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீ மிதி விழா நேற்று முன்தினம் மாலை நடந்தது.
இதையொட்டி 107 பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து தீ சட்டி, கரகம் ஏந்தி ஊர்வலமாக வந்து தீக்குண்டத்தில் இறங்கி, தங்களது நேர்த்தி கடனை செலுத்தி அம்மனை வழிபட்டனர். இந்த விழாவில் சோழவரம், கும்மிடிப்பூண்டி, தச்சூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பலர் வந்திருந்து அம்மனை வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை பஞ்செட்டி ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன், துணைத் தலைவர் கலை மற்றும் கிராம நிர்வாகிகள், பொதுமக்கள் செய்திருந்தனர்.