திருமலை: ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மாநில மகிளா தலைவரும், எம்எல்.சி. பொட்டுலா சுனிதாவின் சகோதரருமானவர் பூஜாரி ராமு(59). இவர் ஆந்திர மாநிலம் நல்லமல்லா மலைத்தொடரில் உள்ள வனப்பகுதியில் மாவோயிஸ்ட் இயக்கத்தின் கமாண்டராக கடந்த 1985ம் ஆண்டு முதல் 1991ம் ஆண்டு வரை பணியாற்றினார். அதன் பிறகு உடல் நிலை மோசமடைந்ததால் போலீசில் சரணடைந்தார். அதன் பிறகு அவர் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் சாலையில் அலைந்து திரிந்து, பழைய வாழ்க்கையை மறந்து சுற்றி வந்தார்.
இதனால் அனைவரும் அவரை மென்டல் ராமா என்று அழைத்து வந்தனர். இதற்கிடையே மனநிலை சரியில்லாமல் அவர் கர்னூல் மாவட்டம், துக்கலி மண்டலம் பெண்டேக்கல் ரயில்வே சந்திப்பில் இரவு தங்கி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் ராமுவை மர்ம நபர்கள் தலையில் கல்லால் தாக்கி கொலை செய்துள்ளனர். இதைபார்த்த அவ்வழியாக சென்ற பொதுமக்கள் கொடுத்த தகவலின்பேரில் சென்ற துக்கலி போலீஸ் எஸ்.ஐ.மல்லிகார்ஜுனா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.