சென்னை: திமுக தலைமை கழகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: மணிப்பூர் மாநிலத்தில் பெண்கள் இருவர் நிர்வாணப்படுத்தப்பட்டு வீதியில் ஊர்வலமாக இழுத்து சென்று பாலியல் பலாத்காரம், மனிதாபிமானமற்ற கொடுமை நிகழ்ந்ததாக, ஊடகச் செய்திகள் தற்போது வெளிவந்துள்ளது. இக்கலவரங்கள் நிகழ்ந்த நேரத்தில் அதனை தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் பிரதமர் மோடி வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டு வந்தார். ஒன்றிய பாஜ அரசும் மகளிருக்கெதிரான இக்கொடுமைகளை தடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள தவறியது.
மணிப்பூர் கலவரம் தொடங்கிய நேரத்திலேயே தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது கண்டனத்தையும், கவலையையும் சமூக ஊடக வாயிலாக வெளிப்படுத்தினார். இச்சூழ்நிலையில் பெண்களுக்கு எதிரான இக்கொடுமையைக் கண்டித்து, வரும் 23ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே மாலை 4 மணியளவில் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். தொடர்ச்சியாக 24ம் தேதி(திங்கட்கிழமை) காலை 10 மணியளவில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்.