திண்டுக்கல்: மணிப்பூரில் கலவரத்தை ஒடுக்காத ஒன்றிய அரசை கண்டித்து திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் பாலா பாரதி தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. சமூக நல்லிணக்க கூட்டமைப்பு சார்பில் நிலக்கோட்டை பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும் முன்னாள் எம்.எல்.வுமான பால பாரதி தலைமையேற்று பேசினார்.
அப்போது மணிப்பூர் மாநிலத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாரபட்சமற்ற நிவாரணம் வழங்கிட வேண்டும். இடம்பெயர்ந்த மக்கள் மீண்டும் அவர்களது வீடுகளுக்கு திரும்ப பாதுகாப்பு தர வேண்டும். மணிப்பூர் கலவரம் பற்றி நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று கோரி முழக்கத்தை எழுப்பினார். மணிப்பூரில் வன்முறையை முடிவுக்கு கொண்டு வந்து குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கவும் கலவரத்திற்கு பொறுப்பேற்று மணிப்பூர் முதலமைச்சர் பதவி விலக வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை அவர் முன் வைத்தார்.
வேலூரில் மாவட்ட ஆட்சியர் முன்பு மார்க்சிய பெரியாரிய பொதுவுடமைக் கட்சியினர் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் மெய்தி மக்களை வெறி ஊட்டி குக்கி மற்றும் நாகா பழங்குடியின மக்களை ஒடுக்கிட கலவரத்தையே மூட்டி 3 மாதங்களாக பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு வேடிக்கை பார்ப்பதாக குற்றம் சாட்டினர். கலவரத்தை கட்டுப்படுத்தாத ஒன்றிய மற்றும் மாநில அரசுகளை கண்டித்து முழக்கங்களையும் எழுப்பினர்.