சென்னை: இந்திய வனத்துறை மற்றும் தமிழ்நாடு வனத்துறை சார்பில், கடலோர மறுவாழ்வு பணி திட்டத்தின் கீழ் கடற்கரையை ஒட்டியுள்ள சதுப்பு நிலப்பகுதிகளை மீட்டெடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக மாங்குரோவ் காடுகள் வளர்ப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கான தொடக்க விழா நேற்று காலை கோவளம் ஊராட்சியில் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியாசாகு தலைமை தாங்கினார்.
இதில் உலக சுகாதார நிறுவன தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன், முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் வனப்படை தலைவர் சுப்ரத் மொஹபத்ரா, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் வனவிலங்குகள் காப்பாளர் சீனிவாஸ் ரெட்டி, சென்னை வட்ட தலைமை வனப்பாதுகாவலர் கீதாஞ்சலி, செங்கல்பட்டு மாவட்ட வனஅலுவலர் ரவிமீனா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஒன்றிய வனத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் கலந்துகொண்டு, கோவளம் முகத்துவார பகுதியில் உள்ள கழிமுகத்தில் மாங்குரோவ் மரக்கன்றுகளை பள்ளி மாணவர்களுடன் சேர்ந்து நட்டு இப்பணியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் திருப்போரூர் வனச்சரக அலுவலர் பொன்.செந்தில், கோவளம் ஊராட்சி மன்ற தலைவர் சோபனா தங்கம் சுந்தர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.