திருப்போரூர்: திருப்போரூர் ஒன்றியம், முள்ளிப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன். விவசாய கூலித்தொழிலாளி. இவரது மனைவி சந்தியா. இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது, இளைய மகன் சூர்யா (17). இந்த கடந்த ஆண்டு மானாம்பதி அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு முடித்துவிட்டு நீட்தேர்வு எழுதி இருந்தார். அவர் நீட்தேர்வில் 403 மதிப்பெண்கள் பெற்று, மருத்துவக்கல்லூரி கவுன்சிலிங்கில் கலந்துக் கொண்டிருந்தார். இந்நிலையில், அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கான 7.5 இட ஒதுக்கீட்டுப் பிரிவு மாணவர்களுக்கு கவுன்சிலிங் நேற்று நடைபெற்றது.
இதில், மானாம்பதி அரசுப்பள்ளி மாணவர் சூர்யா, செங்கல்பட்டு மருத்துவ கல்லூரியில் மருத்துவ மாணவராக சேர இடம் கிடைத்தது. இதனால், பெரும் மகிழ்ச்சி அடைந்த சூர்யா, தனது பள்ளி தோழர்களுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். பின்தங்கிய கிராமப்புற பள்ளி மாணவர் ஒருவருக்கு செங்கல்பட்டு மாவட்ட மருத்துவக் கல்லூரியிலேயே மருத்துவ மாணவராக பயில வாய்ப்பு கிடைத்திருப்பது அப்பகுதிக்கு பெருமையை சேர்த்துள்ளதாக முள்ளிப்பாக்கம் கிராமமக்கள் தெரிவித்தனர். சூர்யாவின் சகோதரர்கள் இருவரும் டிகிரி முடித்துள்ளனர். சகோதரிக்கு திருமணமாகி விட்டது.