முத்துப்பேட்டை: நள்ளிரவில் வீடுபுகுந்து கத்திமுனையில் மருமகளிடம் நகை பறித்த கொள்ளையர்களை எதிர்த்து போராடி விரட்டினார் 82 வயது முதியவர். திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே ஜாம்புவானோடை வடகாடு கிராமத்தை சேர்ந்தவர் ஜெயலட்சுமி(30). இவரது கணவர் சஞ்சய் காந்தி, சிங்கப்பூரில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். மகளுடன் ஜெயலட்சுமி தனியாக வசித்து வருகிறார். பாதுகாப்புக்காக அவரது மாமனார் வைரக்கண்ணு (82) இரவில் அங்கு தங்குவது வழக்கம்.
நேற்று முன்தினம் இரவு ஜெயலட்சுமியும், வைரக்கண்ணுவும் டிவி பார்த்துக்கொண்டு இருந்தனர். அப்போது முகமூடி கொள்ளையர்கள் 4 பேர் புகுந்து ஜெயலட்சுமி கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி நகைகளை பறித்தனர். தடுக்க முயன்ற வைரக்கண்ணுவை அரிவாளால் வெட்ட முயற்சித்தனர். ஆனால் இதற்கு அஞ்சாத வைரக்கண்ணு வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து துணிச்சலுடன் கொள்ளையர்களை நோக்கி ஆவேசமாக பாய்ந்தார். இதில் பயந்துபோன கொள்ளையர்கள் பறித்த நகைகள், கொண்டு வந்த சில பொருட்களை போட்டு விட்டு இரண்டு பைக்குகளில் தப்பியோடினர்.
தகவல் அறிந்து வந்த முத்துப்பேட்டை போலீசார் நடத்திய விசாரணையில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது திருத்துறைப்பூண்டி அருகே கச்சனம் அம்மனூர் பகுதியை சேர்ந்த பிரவீன் குமார்(26), ராஜேஷ்(22), விளத்தூர் கார்த்திக்ராஜா, கச்சனம் சிவநேசன்(23) என்பது தெரியவந்தது. சிசிடிவி கேமரா பதிவின் அடிப்படையில் 4 மணி நேரத்தில் அவர்களை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். கொள்ளையர்களை எதிர்த்து துணிச்சலுடன் போராடிய முதியவர் ைவரக்கண்ணுவை திருவாரூர் எஸ்பி ஜெயக்குமார் பாராட்டினார்.