கொல்கத்தா: இந்தியா கூட்டணியில் கம்யூனிஸ்ட்டுகளின் ஆதிக்கத்தை ஒருபோதும் ஏற்க முடியாது என்று மம்தா தெரிவித்து உள்ளார். மேற்குவங்க மாநிலத்தில் உள்ள 42 மக்களவை தொகுதிகளை பங்கிடுவது குறித்து திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சி இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. இந்தியா கூட்டணியில் மேற்குவங்க மாநிலத்தில் தனித்து போட்டியிடுவதாக கம்யூனிஸ்ட் ஏற்கனவே அறிவித்து விட்ட நிலையில், தற்ேபாது திரிணாமுல், காங்கிரஸ் இடையே எழுந்துள்ள பிரச்னை புதிய சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தநிலையில் கொல்கத்தாவில் திரிணாமுல்தலைவரும், மேற்குவங்க முதல்வருமான மம்தா கூறுகையில்,’ எதிர்க்கட்சிகள் பங்கேற்ற கூட்டத்தின் போது இந்தியா என்ற பெயரை நான் பரிந்துரைத்தேன். ஆனால் நான் கூட்டத்தில் கருத்துக்களை தெரிவிக்கும் போது எல்லாம், இடதுசாரிகள் அதைக் கட்டுப்படுத்த முயல்வதை நான் காண்கிறேன். இதை ஏற்க முடியாது. 34 ஆண்டுகளாக நான் யாருக்கு எதிராக போராடினேனோ அவர்களுடன் ஒருபோதும் உடன்பட முடியாது. எனக்கு இத்தகைய அவமானங்கள் இருந்தபோதிலும், நான் இந்தியா கூட்டணி கூட்டங்களில் கலந்துகொண்டேன். பாஜவை எதிர்த்துப் போராடுவதற்கு எனக்கு பலமும், மக்களின் ஆதரவும் உள்ளது. ஆனால் சிலர் தொகுதிப் பங்கீடு பற்றி நாங்கள் சொல்வதைக் கேட்க விரும்பவில்லை. நீங்கள் பாஜவை எதிர்த்துப் போராட விரும்பவில்லை என்றாலும் கூட, குறைந்தபட்சம் அவர்கள் ஒருசில இடங்களில் வெற்றிபெறுவதற்கு உதவ வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்’ என்று தெரிவித்தார்.
* ராகுல் கோயிலுக்கு போனால் போதுமா?
அசாமில் கோயிலுக்கு செல்ல முயன்ற ராகுல் காந்தி தடுக்கப்பட்டது குறித்து மம்தா கூறுகையில்,’ ராகுல் கோயிலுக்குச் சென்றால் மட்டும் போதாது. இன்று எத்தனை அரசியல்வாதிகள் பாஜவை நேருக்கு நேர் எதிர்கொண்டுள்ளனர்? யாரோ ஒருவர் ஒரு கோயிலுக்குச் சென்று வழிபட்டால் அது போதுமானது என்று நினைக்கிறார். ஆனால் அது இல்லை. நான் மட்டுமே கோயிலுக்கும் சென்றேன். குருத்வாரா, தேவாலயம், மசூதி என அனைத்து இடங்களுக்கும் செல்கிறேன். இதற்காக நீண்ட காலமாக போராடி வருகிறேன். பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது, வன்முறை நடந்தபோது, நான் தெருவில் இறங்கி போராடினேன்’ என்றார்.