கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் ஆசிரியர் பணி நியமனத்தில் முறைகேடு நடந்தது தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றது. இந்த வழக்கில் முதல்வர் மம்தாவின் மருமகனும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான அபிஷேக் பானர்ஜியிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. இந்த வழக்கில் கொல்கத்தாவில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் அபிஷேக் பானர்ஜி நேற்று நேரில் ஆஜரானார். அவரிடம் 9 மணிநேரம் விசாரணை நடந்தது.முன்னதாக அபிஷேக் பானர்ஜி சிபிஐ இயக்குனருக்கு கடிதம் எழுதினார். இந்த கடிதத்தில், “சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சார்பில் 19ம் தேதி பிற்பகலில் எனக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. 20ம் தேதி காலை 11 மணிக்கு சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று 19ம் தேதி பிற்பகலில் எனக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. மிக குறுகிய நேரத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தேன்” என்று குறிப்பிட்டு இருந்தார்.