Wednesday, May 29, 2024
Home » மலேசியா, குவைத்தில் இருந்து 2 விமானங்களில் கடத்தி வந்த ரூ.8.42 கோடி தங்கம் பறிமுதல்: சென்னை விமானநிலையத்தில் 2 பேர் கைது

மலேசியா, குவைத்தில் இருந்து 2 விமானங்களில் கடத்தி வந்த ரூ.8.42 கோடி தங்கம் பறிமுதல்: சென்னை விமானநிலையத்தில் 2 பேர் கைது

by Suresh

மீனம்பாக்கம்: சென்னை சர்வதேச விமான முனையத்தில் நேற்று மலேசியா மற்றும் குவைத்தில் இருந்து வந்த 2 விமானங்களில் கடத்தி வந்த ரூ.8.42 கோடி மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக மலேசிய பயணி உள்பட 2 பேரை கைது செய்து விசாரிக்கின்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. சென்னை விமானநிலையத்தின் சர்வதேச விமான முனையத்தில் வெளிநாட்டு விமானங்கள் மூலமாக பெருமளவில் தங்கக் கட்டிகள் கடத்தி வரப்படுவதாக நேற்று விமானநிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதைத் தொடர்ந்து நேற்று காலை முதல் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்நிலையில், மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து நேற்று மதியம் ஏர்ஏசியா விமானம் சென்னை சர்வதேச விமான முனையத்துக்கு வந்தது. இதில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் கண்காணித்து, சந்தேக பயணிகளை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது மலேசியாவை சேர்ந்த சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் பயணியின்மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரது உடைமைகளை சோதனை செய்தபோது, அதில் துளையிடும் டிரில்லிங் மெஷின் இருந்தது. அதை கழற்றி பார்த்தபோது, அதற்குள் ரூ.1.88 கோடி மதிப்பில் 3.49 கிலோ எடையிலான 3 தங்க உருளைகள் கடத்தி வந்திருப்பது தெரியவந்தது. அவற்றை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், அந்த மலேசிய பயணியை கைது செய்து விசாரிக்கின்றனர்.

இதைத் தொடர்ந்து குவைத் நாட்டிலிருந்து அபுதாபி வழியாக ஏர்அரேபியா ஏர்லைன்ஸ் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சென்னையை சேர்ந்த சுமார் 37 வயதான ஆண் சுற்றுலா பயணிமீது சந்தேகம் ஏற்பட்டது. அவரது உடைமைகளை சோதனை செய்தபோது, அதற்குள் ரூ.2.67 கோடி மதிப்பில் 4.93 கிலோ எடையிலான தங்கக் கட்டிகள் கடத்தி வந்திருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து சென்னையை சேர்ந்த ஆண் பயணியை கைது செய்து, அந்த தங்கக் கட்டிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சென்னை சர்வதேச விமான முனையத்தில் நேற்று அடுத்தடுத்து நடைபெற்ற சுங்க சோதனையில், மலேசியா மற்றும் குவைத் நாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வந்த மலேசியா மற்றும் சென்னை பயணி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் மொத்தம் ரூ.8.42 கோடி மதிப்பிலான 4.55 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

You may also like

Leave a Comment

2 × one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi