Saturday, June 1, 2024
Home » 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்

12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்

by Neethimaan

சென்னை: 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில்; அ.தி.மு.க. ஆட்சியில் 2012-ம் ஆண்டு 16 ஆயிரம் பேர் பகுதிநேர ஆசிரியர்களாக உடற்கல்வி, ஓவியம், கணினி, இசை, தையல் உள்ளிட்ட சிறப்பு பாடங்களை நடத்த அப்போது ரூ. 5 ஆயிரம் சம்பளத்தில் பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். ஒரு ஆண்டுக்கு உள்ள 12 மாதங்களுக்கும் ஊதியம் வழங்க நிதி ஒதுக்கப்பட்டது. ஒரு ஆண்டிற்கு 11 மாதங்களுக்கு மட்டுமே ஊதியம் வழங்கப்படும் என அப்போது வெளியிடப்பட்ட அரசாணையில் இல்லை.

ஆனால் கோடைகால விடுமுறைக்கு மே மாதம் ஊதியம் வழங்கவில்லை. 2012-ம் ஆண்டு மே மாதம் வழங்காததால், இப்படியே 2020-ம் ஆண்டுவரை 9 முறை அவர்களுக்கு ஊதியம் மறுக்கப்பட்டுள்ளது. 2021-ம் ஆண்டு சம்பள உயர்வு கொடுத்து ரூ.10 ஆயிரம் சம்பளமாக உயர்த்தியபோது, இனி மே மாதம் ஊதியம் கிடையாது என திருத்தி புதிய அரசாணையை அ.தி.மு.க. அரசு வெளியிட்டது. இதனால் மே மாதம் ஊதியம் இல்லாமல் பணிசெய்யக்கூடிய நிலைக்கு தற்போது வரை 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் தள்ளப்பட்டு விட்டனர். 2021-ம் ஆண்டு மே மாதம் ஆட்சிக்கு வந்த திராவிட முன்னேற்ற கழக அரசும் இரண்டு ஆண்டுகள் ஆகியும் அவர்களுக்கு மே மாத ஊதியம் வழங்காமல் விட்டுவிட்டது.

திராவிட முன்னேற்ற கழகத்தின் வாக்குறுதிப்படி பணிநிரந்தரம் செய்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று பகுதிநேர ஆசிரியர்கள் முழு எதிர்பார்ப்போடு இருந்த நிலையில் இரண்டு ஆண்டு முடிந்தும்கூட அவர்களுக்கு பணி நிரந்தரம் செய்யவில்லை. அவர்களின் ஊதியமும் உயர்த்தப்படவில்லை. ஒரு மாதம் ஊதியம் கிடைக்க வில்லை என்றால் அது எந்த அளவுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்பதை அனைவரும் அறிவர். 2023-ம் ஆண்டு மே மாதம் ஊதியமாவது கருணையுடன் வழங்குங்கள் என பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளதை மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்கள் தாயுள்ளத்துடன் நிறைவேற்ற வேண்டும்.

திராவிட முன்னேற்ற கழகத்தின் 181-வது தேர்தல் வாக்குறுதிதான் பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கையாகும். எனவே, தமிழ்நாட்டின் முதல்வர் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்யவும், அவர்களுக்கு மே மாதம் ஊதியம் உடனடியாக வழங்கவும் ஆணையிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

You may also like

Leave a Comment

seventeen − 9 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi