சென்னை: வீட்டு பணிப்பெண்ணை துன்புறுத்திய வழக்கில் பல்லாவரம் தொகுதி எம்.எல்.ஏ.வின் மகன் மற்றும் மருமகளுக்கு ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை பல்லாவரம் தொகுதி எம்எல்ஏ மகன் ஆண்டோ மதிவாணன் வீட்டில் உளுந்தூர்பேட்டையை சேர்ந்த ரேகா என்ற சிறுமி வீட்டு வேலை பார்த்து வந்தார். அவரை துப்புறுத்தியதாக எம்எல்ஏ மகன் ஆண்டோ மதிவாணன் மற்றும் அவரது மனைவி மெர்லினாவுக்கு எதிராக இந்திய தண்டனை சட்டம் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கின் அடிப்படையில் ஜனவரி 25ம் தேதி இருவரும் கைது செய்யப்பட்டார்கள். ஜாமின் கோரி இருவரும் தாக்கல் செய்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி நிர்மல் குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில்; பெற்றோர் இல்லாமல் தங்களுடைய 4 வயது குழந்தை பாதிக்கப்பட்டிருப்பதால் தங்களுக்கு ஜாமின் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் இருவருக்கும் ஜாமின் வழங்க கூடாது என்று தெரிவிக்கப்பட்டது. மேலும், விசாரணை முறையாக நடைபெறவில்லை என்றும், சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளது என்றும் கூறி பதில் மானுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
மேலும், காவல்துறை தரப்பில் இந்த வழக்கு தொடர்பாக 16 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது என்றும், இந்த விவகாரத்தில் முறையாக விசாரணை மேற்கொள்ளப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கின் அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதி; இரண்டு வாரங்களுக்கு நீலாங்கரை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் இருவருக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டிருக்கிறார்.