ராய்ப்பூர்: ‘மகாதேவ்’ செயலி பணமோசடி வழக்கில் சட்டீஸ்கர் மாஜி முதல்வர் பூபேஷ் பாகேல் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. சட்டீஸ்கர் மாநிலத்தில் ‘மகாதேவ்’ செயலி தொடர்பான பணமோசடி வழக்கில், கடந்த 8ம் தேதி இரண்டு பேரை அமலாக்கத்துறை கைது செய்தது. இந்த வழக்கில் பல முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் சம்பந்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மகாதேவ் செயலி மூலம் சட்டவிரோதமாக சம்பாதித்த பணம், சட்டீஸ்கரில் உள்ள அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க பயன்படுத்தப்பட்டதாக அந்த நிறுவனம் கூறியிருந்தது. இந்த வழக்கு தொடர்பாக இதுவரை ரூ.1764.5 கோடி மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வழக்கின் முக்கிய குற்றவாளிகளான கிரிஷ் தல்ரேஜா மற்றும் சூரஜ் சோக்கானி ஆகியோர் கைதான நிலையில், தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ‘மகாதேவ்’ ஆப் வழக்கில் சட்டீஸ்கர் மாநில முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகல் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் மீது நம்பிக்கை துரோகம் மற்றும் மோசடி குற்றச்சாட்டுகளின் கீழ் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. மகாதேவ் செயலியின் விளம்பரதாரர்கள், முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேலுக்கு 508 கோடி ரூபாய் கொடுத்ததாக அமலாக்கத்துறை ஏற்கனவே குற்றம் சாட்டி இருந்தது. லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், பூபேஷ் பாகேலுக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.