மதுரை: மதுரையில் வாகன தணிக்கையின்போது உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ.18 கோடி மதிப்பிலான 29.7 கிலோ தங்கம் மற்றும் வைரத்தை தேர்தல் பறக்கும்படையினர் நேற்று பறிமுதல் செய்தனர். மதுரை மாவட்டத்தில், விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட மதுரை விமானநிலையம் அருகேயுள்ள பெருங்குடி சந்திப்பு பகுதியில் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் நேற்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த வாகனம் ஒன்றை பறக்கும்படையினர் நிறுத்தி சோதனையிட்டனர்.
அப்போது, வாகனத்தில் 3 பெட்டிகளில் இருந்து ரூ.18 கோடி மதிப்பிலான 29.70 கிலோ தங்கம் மற்றும் வைரம் இருப்பதை பார்த்து அதற்கான ஆவணங்களை கேட்டுள்ளனர். ஆனால் உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த நகைகளை பறிமுதல் செய்து மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தெற்கு சார்நிலை கருவூலத்தில் பறக்கும்படை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். முதற்கட்ட விசாரணையில் மாநகர் பகுதியில் உள்ள நகைக்கடைகளுக்கு எடுத்து வந்தபோது உரிய ஆவணங்களின்றி கொண்டுவரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.