சென்னை: வாரணாசி – கன்னியாகுமரி சாலையில் செல்லூர் ரயில்வே மேம்பாலம் பாலத்திலிருந்து வைகை வடகரை சாலை வழியாக திண்டுக்கல் சாலையினை இணைக்க கூடுதல் இணைப்பு பாலம் கட்டுதல் பணியை அமைச்சர் எ.வ.வேலு தொடக்கி வைத்தார். இந்தியாவில் உள்ள முக்கியமான ஆன்மிக மையங்களில் ஒன்றாக விளங்கும் மதுரை நகருக்குள் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், சிஆர்எஃப் திட்டத்தின் கீழ் மதுரை மாநகரில் வைகை ஆற்றின் வடக்கு மற்றும் தெற்கு கரையில் ஆற்றங்கரை சாலை அமைக்கப்பட்டது.
CRF 2018- 2019 இன் கீழ் “திண்டுக்கல் சாலையில் இருந்து குருவிக்காரன் சாலை வரை கிமீ 0/0 – 5/0 வரை வைகை வடக்கு ஆற்றங்கரை சாலை அமைக்கும்” பணி நிறைவடைந்துள்ளது. கோரிப்பாளையத்தில் இருந்து சாலையைப் பயன்படுத்துவோர் வடக்குக் கரை நான்கு வழிச் சாலைக்குள் நுழைவதற்கு வசதியாக செல்லூர் மேம்பாலத்தில் தத்தனேரி பக்கத்திலிருந்து கூடுதல் இணைப்பு பாலம் வைகை வடக்குக் கரை சாலையை இணைப்பதற்காக அமைக்கப்படுகிறது. இப்பணிக்கு அரசாணை (நிலை) எண் 71 நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை நாள் 18.05.2020 மூலம் ரூ.950.00 லட்சத்திற்கு நிர்வாக அனுமதி அளிக்கப்பட்டு 06.07.2023 அன்று துவங்கப்பட்டு தற்போது பாலம் கட்டும் பணி முடிவடையும் நிலையில் உள்ளது.
இப்பாலமானது 2023 நவம்பர் மாதத்தில் மக்களின் பயன்பாட்டிற்கு வரும். இந்த கூடுதல் இணைப்பு பாலம் 11 கண்களுடன் மொத்த நீளம் 320.00மீ மற்றும் 7.50மீ அகலம் கொண்டதாக வடிவமைக்கபட்டுள்ளது. மதுரை நகரின் கிழக்குப் பகுதியில் இருந்து மேற்குப் பகுதிக்கு வைகை வடகரை சாலை வழியாக நகரப் போக்குவரத்து இயக்கத்தைத் திருப்பிவிடவும், போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும், விரைவான மற்றும் தடையற்ற போக்குவரத்திற்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.