மதுரை: மதுரை விளாங்குடியில் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார். சொக்கநாதபுரத்தில் அன்பழகன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டப்பட்டு இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வந்தது. இன்று வழக்கம் போல் 4 பணியாளர்கள் வேலை செய்து வந்தனர். இந்நிலையில் படிக்கட்டுகள் அப்படியே கீழே விழுந்தது.
இச்சம்பவத்தில் மாடி படிக்கட்டுக்கு கீழே வேலை பார்த்து கொண்டு இருந்த மூக்காயி என்பவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். மேலும் ஜோதி, தொண்டிச்சாமி, கட்டையன் ஆகியோர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தரையிலிருந்து 15 அடி உயரத்தில் கட்டப்பட்ட படிகட்டின் கம்பிகள் சரியாக கொடுக்காததால் விபத்து ஏற்பட்டதாக தகவல் தெரியவந்துள்ளது. விபத்து நடைபெற்ற இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவரின் உடலை மீட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.