மதுரை: மதுரை அருகே உள்ள அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையை மீண்டும் இயக்க கோரி கரும்பு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். தென் மாவட்டங்களில் உள்ள ஒரே கூட்டுறவு சர்க்கரை ஆலையான அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை கடந்த அதிமுக ஆட்சியின் போது உற்பத்தி நிறுத்தப்பட்டு மூடப்பட்டது.
இந்த ஆலையை மீண்டும் இயக்க கோரி ஆலை ஊழியர்கள், கரும்பு விவசாயிகள் என பலரும் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க திட்டமிட்டு இருந்தனர். அதன்படி ஆலையில் இருந்து மதுரை ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக செல்ல முயன்ற அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. பின்னர், தடுப்பையும் மீறி மதுரை நோக்கி அவர்கள் புறப்பட்டதால் பதற்றமும், பரபரப்பும் உருவானது.