Tuesday, May 21, 2024
Home » மதுரை எய்ம்ஸா? அதிமுகவை கேளுங்க… ஷாக் கொடுத்த அமித்ஷா

மதுரை எய்ம்ஸா? அதிமுகவை கேளுங்க… ஷாக் கொடுத்த அமித்ஷா

by MuthuKumar

வேலூர்: ‘மதுரை எய்மஸ் இன்னும் ஏன் திறக்கவில்லை என்பதற்கு, முன்பு ஆட்சியில் இருந்த அதிமுக தான் பதில் சொல்ல வேண்டும்’ என்று அமித்ஷா பேசி இருப்பது அதிமுகவினரை அதிர்ச்சி அடைய வைத்து உள்ளது. வேலூர் மாவட்டம் கந்தனேரி பகுதியில் பாஜக அரசின் 9 ஆண்டு சாதனைகள் விளக்க பொதுக்கூட்டம் நேற்று மாலை நடந்தது.

சிறப்பு விருந்தினராக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு பேசியதாவது:
பிரதமர் மோடி தலைமையிலான பாஜ ஆட்சியில் தமிழ்மொழி, அதன் தொன்மை, சிறப்பு ஆகியவற்றை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. உலகின் எந்த நாட்டுக்கு சென்றாலும் தமது பேச்சில் தமிழ் மொழி குறித்தும், அதன் இலக்கிய செழுமை குறித்தும் பெருமையுடன் மோடி பேசி வருகிறார். சமீபத்தில் காசி தமிழ் சங்கமம், சவுராஷ்டிர தமிழ் சங்கமம் மூலம் தமிழ்நாட்டிற்கும், உபிக்கும், குஜராத்துக்கும் உள்ள உறவின் பெருமையை சிறப்பித்துள்ளார். திருக்குறளை 25க்கும் அதிகமான மொழிகளில் மொழிபெயர்த்து எல்லா மாநில மக்களும் படித்து அறியும் வகையில் பெருமைப்படுத்தியுள்ளார். சமீபத்தில் பப்புவா நியுகினியா நாட்டிற்கு சென்றபோது திருக்குறளை அந்நாட்டு மொழியில் மொழி பெயர்த்து பெருமைப்படுத்தி பேசியுள்ளார்.

கடந்த 9 ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு ₹2 லட்சத்து 43 ஆயிரம் கோடி வழங்கப்பட்டுள்ளது. மதுரை எய்ம்ஸ் இன்னும் ஏன் திறக்கவில்லை அதிமுகவிடம் நான் கேட்க விரும்புகிறேன். ஏன் என்றால் முன்பு ஆட்சியில் இருந்தபோது எய்மஸ் ஏன் திறக்கப்படவில்ைல என்ற பதிலை அவர்கள் தான் சொல்லணும். உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன். காஷ்மீருக்கான 370வது பிரிவை நீக்கியது சரியா? இல்லையா? (கூட்டத்தில் இருந்தவர்கள் ‘சரி, சரி’ என்று கூச்சல் எழுப்பினர்) அப்பிரிவை நீக்கியதன் மூலம் மோடி காஷ்மீரை சட்டரீதியாக இந்தியாவுடன் இணைத்துள்ளார். ஆகவே வரும் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 300 சீட்டுகளுக்கும் மேல் பெற்று 3வது முறையாக மோடி தலைமையிலான ஆட்சி அமையும். தமிழ்நாட்டில் இருந்து 25 எம்பிக்களை தேர்வு செய்து அனுப்பி அங்கு செங்கோலுக்கு கீழே அவர்களை அமர்ந்து பணியாற்ற அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

அதிமுகவுடன் கூட்டணி இறுதி செய்வதில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், மதுரை எய்ம்ஸை அதிமுகவை கேளுங்கள் என்று அமித்ஷா பேசி இருப்பது அதிமுகவினரை அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

You may also like

Leave a Comment

twenty − 16 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi