*91 லிட்டர் சாராயம் பறிமுதல்
திருபுவனை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 19ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. வாக்காளர்களுக்கு பணம் பரிசுப் பொருட்கள் மது பாட்டில்கள் சாராயம் வழங்குவதை தடுக்க தேர்தல் பறக்கும் படை மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நெட்டப்பாக்கம் போலீசார் மடுகரை சாராயக்கடை அருகே தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது போலீசாரை பார்த்ததும் ஒரு நபர் தப்பியோட முயற்சி செய்தார். உடனே போலீசார் அவரை மடக்கி பிடித்து அவர் வைத்திருந்த சாக்கு பையை சோதனை செய்தனர். அதில் சாராய பாக்கெட்டுகள் இருந்தது தெரியவந்தது இதனையடுத்து அவரை காவல் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினர். அதில் மடுகரை வி.எஸ் நகர் பகுதியை சேர்ந்த பரமசிவம் (47) என்பதும் புதுச்சேரியில் இருந்து தமிழக பகுதிக்கு சாராயம் கடத்த முயன்றதும் தெரியவந்தது. ரூ.16 ஆயிரம் மதிப்புள்ள 91 லிட்டர் சாராய பாக்கெட் மற்றும் பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து கலால் துறையிடம் ஒப்படைத்தனர். பிறகு அவர் மீது வழக்கு பதிந்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.