புழல்: மாதவரம் மண்டலம் 31வது வார்டில் 15 மூலிகை பூங்காக்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது. மாதவரம் மண்டலம் 31 வது வார்டுக்கு உட்பட்டது கதிர்வேடு, கலெக்டர் நகர், சௌமியா நகர், எம்ஜிஆர் நகர், பத்மாவதி நகர், சத்தியமூர்த்தி நகர், ஜெய் மாருதி நகர், சீனிவாசன் நகர், பிர்லா அவன்யூ, ரங்கா அவன்யூ ஆகிய பகுதிகள் உள்ளது. இங்குள்ள, மக்கள் பயன்பாட்டுக்காக பல்வேறு காலகட்டத்தில் மாநகராட்சி வார்டு சார்பில் பூங்காக்கள் அமைக்கப்பட்டது. இங்கு, பொதுமக்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் நடைப்பயிற்சிக்கு சென்று வரவும் ஏற்பாடு செய்யப்பட்டு, இயற்கை சூழ்நிலை உருவாக்க தோட்டங்களில் மூலிகை செடிகள் அமைக்கப்பட்டும் தினசரி பராமரிக்கப்பட்டு வருகிறது.
மேலும், 31வது வார்டுக்கு உட்பட்ட பல இடங்களில் உள்ள மாநகராட்சி பூங்கா புதுப்பிக்கவும் உள்ளது. மாதவரம் மண்டலத்துக்குட்பட்ட வார்டுகளில் அதிகப்படியான பூங்காக்கள் உள்ள பகுதியாகவும் அதிலும் முறையாக மரம், செடிகள் மற்றும் சிறுவர்கள் விளையாடக்கூடிய விளையாட்டுப் பொருட்களையும் வைக்கப்பட்டு மின்விளக்கு வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது பகுதி மக்களிடம் பெரும் வரவேற்பு ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து வார்டு பொதுமக்கள் கூறுகையில், தங்கள் பகுதிகளில் 15 பூங்காக்கள் உள்ளது. இவை அனைத்தும் மூலிகை செடிகளுடன் அமைக்கப்பட்டுள்ள பூங்காவாகும். காலை மற்றும் மாலை நேரங்களில் நடைப்பயிற்சிக்கு செல்வதற்கும், எங்களது வீட்டுப் பிள்ளைகள் விளையாடுவதற்கு விளையாட்டு சாதனங்களும், ஓய்வு நேரத்தில் இங்கு சென்று இயற்கையான காற்றை அனுபவித்து சற்று மன நிம்மதியை பெற்று வருகிறோம். இதை தொடர்ந்து, கண்காணித்து வரும் வார்டு கவுன்சிலர் கதிர்வேடு சங்கீதா பாபு மற்றும் மாநகராட்சி பூங்கா பராமரிப்பு அதிகாரிகள் ஆகியோருக்கு எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என கூறினர்.