புனே: மபி, ராஜஸ்தான் சட்டசபை தேர்தல்களில் இந்தியா கூட்டணி ஓரணியில் நின்று போட்டியிடும் என்று சரத்பவார் தெரிவித்துள்ளார். சட்டீஸ்கர், மிசோரம், ம.பி, ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய மாநில சட்டசபை தேர்தல்கள் இந்தாண்டு இறுதிக்குள் நடக்க உள்ளது. இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் பாராமதியில் ‘இந்தியா’ கூட்டணியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், தேசியவாத காங்கிரஸ் தலைவருமான சரத்பவார் பேசியபோது தெரிவித்ததாவது: அடுத்த ஆண்டு நடக்கவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் பாஜவுக்கு எதிராக போட்டியிட இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டது. தற்போது 28 கட்சிகள் ஓரணியில் சேர்ந்திருக்கிறோம். தேர்தல் சமயத்தில் கூட்டணி கட்சிகளிடையே கருத்து வேறுபாடு ஏற்படுவது சகஜம். அவற்றை மூத்த தலைவர்கள் முன்னின்று பேசி சுமுகமாக தீர்க்கப்படும். ராஜஸ்தான், ம.பி தேர்தலில் இந்தியா கூட்டணி ஓரணியில் இணைந்து செயல்படும். அடுத்து வரும் 10 நாட்களுக்கு காங்கிரஸ் மற்றும் மற்ற கூட்டணி தலைவர்களிடையே பேச்சு வார்த்தை நடத்தி கருத்து வேறுபாடுகளை அகற்றி ஓரணியில் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு சரத்பவார் தெரிவித்தார்.
மபி, ராஜஸ்தான் தேர்தலில் இந்தியா கூட்டணி போட்டி: சரத்பவார் உறுதி
previous post