‘தாமரை பூ மலர்கிறதோ இல்லையோ… பிரச்னைகள் மட்டும் புதிது புதிதாக வளர்ந்தும், மலர்ந்தும் கொண்டிருப்பதை சொல்லுங்க…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘மாநில தலைமைக்கு ‘பிரதர் மவுன்டன்’ வந்ததிலிருந்து, தாமரைக் கட்சிக்குள் ஆடியோ ரிலீஸ் என்ற கலாசாரம் உருவாகி அந்த கட்சிக்குள்ளயே நிர்வாகிகளை அலறவிட்டுள்ளதாம். இதற்கு காரணம், தன்னை மீறி எதுவும் தமிழகத்தில் நடந்து விடக்கூடாது என்ற எண்ணம் ‘பிரதர் மவுன்டனு’க்கு வந்துவிட்டது காரணம். இந்நிலையில், ஆடியோ விவகாரத்தால் கடலோர மாவட்ட தாமரைக் கட்சித் தலைமையில் இருந்த சூரியனார் பதவி சமீபத்தில் பறிபோனது. இதற்கு பின்னால் சாதி ரீதியான பின்புலம் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல் ஜெட் வேகத்தில் உலா வருகிறதாம். கடந்தாண்டு செப்டம்பரில் ஒரு தலைவரின் நினைவுநாளில் ‘குடி’யில் முடியும் ஊரில் மரியாதை செலுத்திட, ‘குடி’யில் முடியும் மற்றொரு ஊரிலிருந்து இலையிலிருந்து தாமரைக்குத் தாவிய பெண் மாஜி எம்பி வந்தாராம்.
அவரிடம் உள்ளூரை சேர்ந்த மாநில நிர்வாகி ‘ஒரு’ விதமான தொல்லை கொடுத்த காட்சிகள் கொண்ட வீடியே திட்டமிட்டு பதிவு செய்து, லீக்கும் செய்தார்களாம். அதற்கு பின்னால், ‘மவுன்டன்’ தான் இருக்கிறார் என்று பதவி பறிபோனவர் புலம்பி தள்ளிக் கொண்டுள்ளாராம். இதன்பேரில் மாநில நிர்வாகியை நடவடிக்கை என்ற பெயரில் தூக்கிட்டாங்களாம். இந்த வீடியோ ரிலீஸ் பின்புலத்தில் சூரியனார் இருந்ததாக பேசிக்கொண்டார்கள். இதற்கு பழிக்குப் பழி வாங்கவே, சூரியனாரை சிக்க வைக்க 6 மாதமாக வேலை நடந்து வந்துள்ளதாம். அதற்காக பல ஸ்கெட்ச் போட்டாங்களாம். அதில் ஒன்றில் மாட்டிக் கொண்டுள்ளார் அவர். அதாவது, பரிசுப்பெட்டியினர், இலைக்கட்சியினர் உள்ளிட்ட கட்சிகளில் இருந்து வந்தவர்களுக்கெல்லாம் மாவட்ட செயலாளர் முதல் ஒன்றிய தலைவர் உள்ளிட்ட பொறுப்புகள் வரை சூரியனார் பதவிகளை வாரி வழங்கினாராம்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட ஒரு அணியினர், சூரியனாரின் தீவிர ஆதரவாளரோடு கரன்சி பேரம் பேசும் ஆடியோவை ரிலீஸ் செய்து, பதவி காலி செய்துட்டாராம். இரண்டுக்கும் பின்னணியில் ‘மவுன்டன்’ கையும் இருக்காம். இதனையடுத்து, இரு அணிகளைச் சேர்ந்த இரு சமுதாயத்தினர் தாமரைக் கட்சி, தொடர்ந்து எங்கள் சாதியை புறக்கணிக்கிறாங்க. இதனால், வரும் நாடாளுமன்றத்தில் நாங்கள் யார் என்பதை காட்டுவோம் என போஸ்டர் ரெடி பண்ணி சமூக வலைதளங்களில் பரப்பி வர்றாங்க. தங்கள் எதிரிக்கு பின்னால் ‘மவுன்டன்’ தான் இருக்கிறார் என்று இரண்டு அணிகளும் செம கடுப்பில் இருக்காங்களாம். தான் சம்பந்தப்படாத விஷயத்தில் தன்னை இழுத்த சம்பவம் தெரிந்ததும், கடலோர மாவட்ட தாமரைக்காரர்கள் மீது ‘பிரதர்மவுன்டன்’ செம கோபத்தில் இருக்கிறாராம்…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘எருது விடும் விழா அனுமதிக்கு பல லகரங்களை அள்ளிவிட வேண்டியிருக்காமே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘வெயிலூர், மிஸ்டர் பத்தூர், கிரிவலம், குயின்பேட்டை மாவட்டத்துல எருது விடும் விழா ரொம்பவே பிரபலம். அரசு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் எருது விடும் விழா நடத்தி வருது. விழா நடத்துவது தொடர்பாக வருவாய், காவல், பொதுப்பணித்துறை,
தீயணைப்பு, மருத்துவம், கால்நடை மருத்துவர்கள், அந்தெந்த துறை சார்பில் அதிகாரிங்ககிட்ட தடையில்லாத சான்று வாங்கணும். அது இருந்தால் மட்டுமே விழாவை நடத்தலாமாம். ஆனால் தடையில்லா சான்று, வாங்க படாத பாடு பாட வேண்டியிருக்குதுன்னு போட்டி நடத்தும் கிராமத்து மக்கள் கொந்தளிப்பில் இருக்காங்களாம். எருது விடும் விழாவின்போது காலை டிபன், மதியம் தடபுடல் பிரியாணி விருந்து கவனிப்புடன் அந்தந்த துறைக்கு ஏற்பாடு செய்யணுமாம்.
விழாவுக்கு முன்னாடி தடையில்லா சான்று வாங்க, வருவாய்த்துறைக்கு 5 கே, போலீஸ் ஸ்டேஷனுக்கு 15 கே டூ 20 கே, பயர் ஸ்டேஷனுக்கு 10 கே, காக்கி உயர் அதிகாரிங்க வந்துட்டா அதுக்கு தனி 5 கே என்று டிபார்ட்மென்ட் வாரியாக அடிமட்ட அலுவலர்கள் வரை ‘ப’ வைட்டமின் பாய்ந்தால் தான், களத்துல எருதுகள் பாய்ந்து ஓட அனுமதி கிடைக்குதாம். இதுக்காக விழாக்குழுவினர் பல லகரங்களை வாரி இறைக்க வேண்டி இருக்காம். பொதுப்பணம் இல்லாமல் சொந்த பணத்தையும் சிலர் வாரி இறைக்கிறாங்களாம். கரன்சி பிரச்னையால, எருதுவிடும் விழாவையே நடத்த முடியாமல் விழிபிதுங்கி போயிருக்காங்க. இதுபோன்ற அதிகாரிகளை உடனே டிஸ்மிஸ் செய்யணும்னு மக்கள் கொந்தளிக்கிற அளவுக்கு கரன்சி பிரச்னை விஸ்வரூபம் எடுத்து இருக்காம்…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘சேலம்காரர் கையில டெடி பொம்மையை எதுக்கு கொடுத்தாங்களாம்…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘இலைக்கட்சியின் பொதுச்செயலாளரானது, இந்த மாங்கனிக்கே பெருமையின்னு சேலத்து மாஜி கொக்கரிச்சாராம். அப்படியே அவருக்கு மாங்கனி நகருல பிரமாண்டமான வரவேற்பை தொண்டர்கள் கொடுத்து அசத்திட்டாங்களாம். இதுல புதுரகமா குட்கா வழக்குல சிக்குன மாஜியும் சீர்வரிசையோட வந்து அமர்க்கள படுத்தினாராம். முக்கனிகளில் ஆரம்பிச்சு, ஆடு, கோழி, மாடுன்னு ரெண்டு ரெண்டா கொண்டாந்தாராம். அதுல குழந்தைகள் கட்டிப்பிடிச்சி விளையாடும் டெடி பொம்மைகளும் அடங்குமாம். குறிப்பா கட்சியின் நிறுவனர் வேடம்போட்ட அஞ்சுபேரையும் வரிசையா நிறுத்திட்டாராம்.
அதுவும் மாஜியின் நிழலானவரை பார்த்து ஆசி வாங்கிட்டுத்தான் ஊர்வலமா போனாராம். உள்ளுர் சந்தையில விலை போகாது என்பதை தெரிஞ்சிக்கிட்ட நிழலு, வெளியூரில் இருந்து பிரமாண்டத்தை கொண்டுவரணுமுன்னு திட்டமிட்டு குட்காவை ஏற்பாடு செய்ய வச்சதா உள்ளூர் கட்சிக்காரங்க பேசிக்கிறாங்க. எல்லா சீர்வரிசைகளும் ஓகே தான். எதுங்குங்கய்யா கொஞ்சுறதுக்கு டெடி பொம்மைய கொண்டு வந்தீங்கன்னு மாங்கனி மாவட்டத்தை சேர்ந்த இலை கட்சியினரின் கேள்வியாக இருந்ததாம்…’’ என்றார் விக்கியானந்தா.