மதுரை : போதைப்பொருள், லாட்டரி விற்கும் பெட்டிக் கடைகளை கண்டறிந்த உடனே சீல் வைக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் இளம் தலைமுறையினருக்கு அச்சுறுத்தலாக இருக்கும், சமுதாயத்தை அதிக அளவில் பாதிக்கும் மதுபானம் கஞ்சா, குட்கா போதைப்பொருள் மற்றும் தடைச் செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை தமிழகத்திற்குள் அனுமதிக்காமல் தடுக்கும் நடவடிக்கைகளில் அரசு தீவிரம் காட்டி வருகிறது. இருப்பினும் பெட்டி கடைகளில் சட்டவிரோதமாக மதுபானம், லாட்டரி, போதைப்பொருள் விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பெட்டி கடைகளில் சட்டவிரோத மதுபானம், லாட்டரி, போதைப்பொருள் விற்பனை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மதுரையைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சட்டவிரோத மதுபானம், லாட்டரி, போதைப்பொருள் விற்பனை மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது என தெரிவித்தார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், “போதைப்பொருட்கள் மற்றும் லாட்டரி சீட்டுகள் விற்கும் பெட்டிக்கடையை கண்டறிந்த உடனே சீல் வைக்க வேண்டும். மேலும் புகாருக்கு உள்ளாகும் பெட்டிக்கடைகள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை என்ன என்பது குறித்து காவல்துறை நிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும், “என்று தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தனர்.