Sunday, June 16, 2024
Home » நாளை மறுநாள் வாக்குப்பதிவு: 6-ம் கட்ட மக்களவை தேர்தல் பிரச்சாரம் நிறைவு

நாளை மறுநாள் வாக்குப்பதிவு: 6-ம் கட்ட மக்களவை தேர்தல் பிரச்சாரம் நிறைவு

by Neethimaan

கொல்கத்தா: 6-ம் கட்ட மக்களவை தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்தது. நாடு முழுவதும் ஏப். 19ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடக்கிறது. இதுவரை 5 கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது. முதல்கட்டத்தில் 66.14 சதவீதம், 2வது கட்டத்தில் 66.71 சதவீதம், 3வது கட்டத்தில் 65.68 சதவீதம், 4ம் கட்டத்தில் 69.16 சதவீதம், 5ம் கட்டத்தில் 60.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. தற்போது வரை 428 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் 6ம் கட்டமாக 7 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தை சேர்ந்த 58 தொகுதிகளில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

பீகாரில் 8 தொகுதிகள், அரியானாவில் 10 தொகுதிகள், ஜம்மு -காஷ்மீரில் 1 தொகுதி, ஜார்கண்டில் 4 தொகுதிகள், டெல்லியில் 7 தொகுதிகள், ஒடிசாவில் 6 தொகுதிகள், உத்தரபிரதேசத்தில் 14 தொகுதிகள், மேற்குவங்கத்தில் 8 தொகுதிகள் என மொத்தம் 58 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஒடிசாவில் மக்களவை தேர்தலுடன் மாநில சட்டமன்றத்துக்கும் தேர்தல் நடப்பதால், அங்கு 43 சட்டமன்ற தொகுதியில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறும். யூனியன் பிரதேசமான ஜம்மு-காஷ்மீரில் அனந்த்நாக் ரஜோரி தொகுதியில் 3ம் கட்டத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருந்தது.

ஆனால் மோசமான வானிலை காரணமாக வாக்குப்பதிவு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறும். மேற்கண்ட 58 தொகுதிகளில், 889 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களுடன் அனந்த்நாக்-ரஜோரி தொகுதியை சேர்ந்த 20 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.

ஸ்டார் வேட்பாளர்கள்: புதுடெல்லி மக்களவை தொகுதியில் மறைந்த ஒன்றிய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மகள் பன்சூரி ஸ்வராஜ் பா.ஜ வேட்பாளராக களம் காண்கிறார். அவரை எதிர்த்து இந்தியா கூட்டணி சார்பில் ஆம்ஆத்மி மூத்த தலைவர் சோம்நாத் பார்தி போட்டியிடுகிறார். வடகிழக்கு டெல்லியில் பாஜ மூத்த தலைவரான பீகாரை சேர்ந்த மனோஜ் திவாரி எம்பி மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் கன்னையா குமார் களம் இறக்கப்பட்டுள்ளார்.உத்தரபிரதேச மாநிலத்தில் சுல்தான்பூரில் பாஜ சார்பில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் மேனகா காந்தி,

ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக்-ரஜோரியில் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி, மேற்குவங்கத்தில் தம்லுக்கில் உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய் (பாஜ), அரியானாவின் கர்னாலில் முன்னாள் முதல்வர் மனோகர் லால் கட்டார் (பாஜ), குருக்ஷேத்ராவில் தொழிலதிபர் நவீன் ஜிண்டால் (பாஜ), ஒடிசாவின் பூரியில் சம்பித் பத்ரா (பாஜ), சம்பல்பூரில் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் (பாஜ) உள்ளிட்டோர் 6ம் கட்ட தேர்தலில் முக்கிய வேட்பாளராக களம் இறங்கி உள்ளனர். இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது. இதனால் கட்சி தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் இறுதிகட்ட பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதே நேரத்தில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடப்பதால் அதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது. 6ம் கட்டம் முடிந்தவுடன் வரும் ஜூன் 1ம் தேதி 7ம் கட்ட வாக்குப்பதிவு நடக்கிறது.

You may also like

Leave a Comment

ten − 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi