சென்னை : மக்களவை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை மறுநாள் தொடங்க உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணிகளை இறுதி செய்யவும் தொகுதிகளை பகிர்ந்து கொண்டு வேட்பாளர்களை அறிவிக்கவும் தீவிரம் காட்டி வருகின்றன. தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 9 தொகுதிகள், விடுதலைச் சிறுத்தைகள், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளன.இதன்மூலம் திமுக 21 தொகுதிகளில் நேரடியாக போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. அதே நேரத்தில் பல சுற்று பேச்சுவார்த்தைக்கு பின்னரும் இதுவரை கூட்டணியை இறுதி செய்ய முடியாமல் அதிமுகவும் பாஜகவும் தவித்து வருகிறது.
இந்த சூழலில் அதிமுக பாமக கேட்ட 7 மக்களவை தொகுதி மற்றும் ஒரு ராஜ்யசபா தொகுதி தர முன்வந்ததாக கூறப்படுகிறது. அதே நேரம், அதிமுக – தேமுதிக இடையே கூட்டணி அமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது. தேமுதிக ஒரு மாநிலங்களவை தொகுதியை ஒதுக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்துவதே இந்த இழுபறிக்கு காரணமாக சொல்லப்படுகிறது. அதே போல், பாஜக கூட்டணியில் தமாகா, இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதி கட்சி, இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், ஓபிஎஸ் அணி, அமமுக ஆகிய கட்சிகள் இணைந்துள்ளன. தொகுதி பங்கீடு தற்போது இறுதி கட்டத்தை எட்டியிருக்கிறது. இன்னும் ஓரிரு நாளில் கூட்டணி, தொகுதி பங்கீடுகளை இறுதி செய்து அறிவிப்புகளை பாஜக வெளியிட இருக்கிறது.