Wednesday, May 15, 2024
Home » லோன் வாங்கி தருவதாக ரூ.40 லட்சம் மோசடி 6 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் சென்னையில் கைது: பொருளாதார குற்றப்பிரிவு தனிப்படை அதிரடி

லோன் வாங்கி தருவதாக ரூ.40 லட்சம் மோசடி 6 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் சென்னையில் கைது: பொருளாதார குற்றப்பிரிவு தனிப்படை அதிரடி

by Karthik Yash

சென்னை: மகளிர் குழு லோன் வாங்கி தருவதாக ரூ.40 லட்சம் மோசடி செய்து விட்டு 6 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவரை பொருளாதார குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் சென்னையில் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதியை சேர்ந்த மாயழகன் மனைவி நந்தினி தேவி. இவர் திண்டுக்கல் மதுரை ரோடு அண்ணாமலை மில்ஸ் எஸ்ஆர் நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் மகளிர் குழு லோனுக்காக கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு அணுகியுள்ளார். அப்போது மகளிர் குழு லோன், வீடு கட்ட லோன் தருகிறோம். அதற்கு ஒரு குறிப்பிட்ட தொகை முன்பணம் கட்ட வேண்டும் என கூறியுள்ளனர்.

இதையடுத்து அவர் சுமார் ரூ.40 லட்சம் வரை பொதுமக்களிடம் வசூல் செய்து அந்த நிறுவனத்தில் கட்டியுள்ளார். ஆனால் அவர்கள் கடந்த 2 ஆண்டாக லோன் வாங்கி தராமல் இழுத்தடித்துள்ளனர். அவர்களுடைய செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த அவர் நேரில் சென்றபோது நிறுவனம் பூட்டப்பட்டு இருந்தது. அதிர்ச்சியடைந்த நந்தினி தேவி, திண்டுக்கல் எஸ்பி அலுவலகத்தில் புகார் செய்தார். மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து மோசடியில் ஈடுபட்டதாக கடலூர் மாவட்டம், ராமநத்தத்தை சேர்ந்த செல்வராஜ் (50) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர். இதில், அவர் திருச்சியை தலைமையிடமாக கொண்டு திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் நிறுவனம் நடத்தியதும், இதேபோல் பல பேரிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்ததும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார், செல்வராஜை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பின்னர் ஜாமீனில் வெளிவந்த அவர் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்துள்ளார். இதையடுத்து இந்த வழக்கு பொருளாதார குற்றப்பிரிவிற்கு மாற்றப்பட்டது. இதையடுத்து அவரை பிடிக்க ஏடிஜிபி பாலநாகதேவி, ஐஜி சத்தியபிரியா, எஸ்பி பி.சி.கல்யாண் ஆகியோரின் உத்தரவுபடியும், டிஎஸ்பி குப்புசாமி மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் அன்னலட்சுமி தலைமையில், எஸ்ஐ நாகராஜ், சிறப்பு எஸ்ஐ கருப்பையா ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் செல்போன் டவரை வைத்து செல்வராஜை பல்வேறு இடங்களில் தேடினர். அப்போது அவர் சென்னை குரோம்பேட்டை அருகே பதுங்கிருப்பது தெரிய வந்தது. அங்கு சென்ற போலீசார், 6 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த செல்வராஜை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுரை சிறையில் அடைத்தனர்.

You may also like

Leave a Comment

twenty + 15 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi