சென்னை: பேரவை நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்ப வேண்டுமென அரசியலமைப்பு சட்டத்தின் படி கட்டாயம் இல்லை என ஐகோர்ட் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்யவேண்டும் என விஜயகாந்த், சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் ஜெகதீஸ்வரன், அதிமுக கொறடா வேலுமணி ஆகியோர் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது; சட்டமன்ற நிகழ்வுகள் தொடர்பாக சபாநாயகருக்கு நோட்டீஸ் அனுப்ப முடியாது. பேரவை நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்ப வேண்டுமென அரசியலமைப்பு சட்டத்தின் படி கட்டாயம் இல்லை என நீதிபதி தெரிவித்தார்.
சபாநாயகருக்கு உத்தரவிட அரசியலமைப்பு சட்டம் தடை விதிக்கவில்லை என எஸ்.பி.வேலுமணி தரப்பில் வாதிடப்பட்டது. இ-விதான் என்ற செயலி மூலம் நேரடியாக ஒளிபரப்பலாம்; பல சட்டமன்றங்களும் ஒளிபரப்புகின்றன. ஆளும்கட்சி பேசும்போது நேரலை செய்யப்படுகிறது; எதிர்க்கட்சி உள்ளிட்டோர் பேசும்போது துண்டிக்கப்படுகிறது. தொடர்ந்து சட்டமன்ற ஒளிபரப்பின்போது இருட்டடிப்பு செய்வதை நிரூபிப்பதாக கூறி வேலுமணி தரப்பில் அவகாசம் கேட்டதால், விசாரணை ஜன.23-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.