ஜெய்ப்பூர்: லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வரும் ஜோடிகளின் உறவானது குற்றமல்ல என்று கூறிய உயர் நீதிமன்றம், ஆள் கடத்தல் புகார் கூறிய கணவரின் மனுவை தள்ளுபடி செய்தது. ராஜஸ்தானை சேர்ந்த சஞ்சீவ் என்பவர் வேறொருவரின் மனைவியுடன் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் (திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்தல்) இருந்து வந்தார். அதனால் தனது மனைவியை ஒருவர் கடத்திச் சென்று விட்டதாக போலீசில் அந்தப் பெண்ணின் கணவர் புகார் அளித்தார்.
அதையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து அந்தப் பெண்ணை தேடி வந்தனர். இதற்கிடையே அந்தப் பெண் நீதிமன்றத்தில் ஆஜராகி, தன்னை யாரும் கடத்தவில்லை என்றும், சஞ்சீவ் என்பவருடன் தனது சொந்த விருப்பத்தின் பேரில் உறவில் இருந்ததாகவும் வாக்குமூலம் அளித்தார். இவ்வழக்கு ராஜஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதி பிரேந்திர குமார் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரரான கணவரின் வழக்கறிஞர் கூறுகையில், ‘சஞ்சீவ் என்பவருடன் திருமணத்திற்குப் புறம்பான தொடர்பில் இருந்ததாக, அந்தப் பெண் ஒப்புக்கொண்டார். அதனால் ஐபிசி 494 மற்றும் 497 பிரிவுகளின் கீழ் குற்றமாகும்’ என்று வாதிட்டார். மேலும், சுப்ரீம் கோர்ட் உத்தரவை மேற்கோள் காட்டி திருமணத்திற்கு புறம்பான உறவு தவறானது என்று வாதிட்டார்.
அப்போது நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘திருமணமான தம்பதியினருக்கு இடையில் மட்டுமே உடல் உறவு இருக்க வேண்டும் என்பது உண்மைதான். ஆனால் திருமணமாகி இருந்தாலும், இவரும் சம்மதித்து உறவு கொண்டால் (விபசாரத்தைத் தவிர) குற்றமாகாது. இருவருமே இரண்டாவது திருமணம் செய்து கொள்ளவில்லை. அவர்களின் திருமணம் நிரூபணமாகாத வரை, லிவ்-இன் ரிலேஷன்ஷிப் போன்ற திருமணம் போன்ற உறவு, சட்டப்பிரிவு 494-ன் கீழ் வராது. எனவே ஐபிசி பிரிவு 366ன் கீழ் அந்தப் பெண் எந்த குற்றமும் செய்யவில்லை. அதனால் எப்ஐஆர் ரத்து செய்யப்படுகிறது’ என்று உத்தரவிட்டார்.