கள்ளக்குறிச்சி : உளுந்தூர்பேட்டை அருகே பட்டியல் சமூகத்தினர் வாழும் பகுதியில் அனுமதியின்றி விநாயகர் சிலையை வைக்க முயன்றதோடு தட்டிக்கேட்டவர்களை ஆபாசமாக திட்டியதாக பாஜகவினர் 12 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள அரும்பலவாடி கிராமத்தில் பட்டியல் சமூகத்தினர் வசிக்கும் பகுதியில் மாரியம்மன் கோவில் ஒன்று உள்ளது.
இங்கு முன்னனுமதிபெறாமல் விநாயகர் சிலையை எடுத்துவந்து பாஜகவினர் வைக்கமுயன்றனர். இதனை தட்டிக்கேட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்களை பாஜகவினர் மிரட்டியதாக தெரிகிறது. அத்துடன் கொலை மிரட்டலும் விடுத்ததாக எலவனாசூர் கோட்டை காவல் நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் புகார் அளித்தனர்.
பாஜக நிர்வாகிகளை கைது செய்ய வேண்டும் என்று காவல் நிலையத்தையும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முற்றுகையிட்டனர். அதை தொடர்ந்து அனுமதியின்றி விநாயகர் சிலையை வைக்க முயன்ற பாஜக நிர்வாகிகள் 12 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த சம்பவத்தால் அரும்பலவாடி கிராமத்தில் பதற்றமான சூழல் நிலவியது.